முகப்பு
இந்தியா

முசாஃபர்பூர் சம்பவம்: பிகார் பெண் அமைச்சர் ராஜிநாமா

பிகார் மாநிலம் , முசாஃபர்பூர் காப்பகத்தில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக அந்த மாநில சமூக நலத் துறை அமைச்சர் மஞ்சு வர்மா புதன்கிழமை தனது பதவியை ராஜிநாமா

Updated On : 30 ஜனவரி, 2024 at 4:27 PM
பகிர்:

பிகார் மாநிலம் , முசாஃபர்பூர் காப்பகத்தில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக அந்த மாநில சமூக நலத் துறை அமைச்சர் மஞ்சு வர்மா புதன்கிழமை தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
முன்னதாக, காப்பக சம்பவம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட தொண்டு நிறுவன உரிமையாளர் பிரஜேஷ் தாக்குருடன், மஞ்சு வர்மாவின் கணவர் சந்தேஷ்வர் வர்மாவுக்கு தொடர்புள்ளதாகவும், இருவரும் 17 முறை தொலைபேசியில் பேசியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இதைத் தொடர்ந்து, மஞ்சு வர்மா பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தினர்.
இந்நிலையில், பாட்னாவில் முதல்வர் நிதீஷ் குமாரை புதன்கிழமை நேரில் சந்தித்த மஞ்சு வர்மா, தனது ராஜிநாமா கடிதத்தை அளித்தார். அவரது ராஜிநாமா கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக முதல்வர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதுதொடர்பாக மஞ்சு வர்மா கூறுகையில், பதவியை ராஜிநாமா செய்யுமாறு, முதல்வர் நிதீஷ் குமார் எந்த நெருக்கடியும் அளிக்கவில்லை. எனது கணவர் அரசியலிலும், சமூக சேவைகளிலும் ஆர்வம் உள்ளவர். அந்த அடிப்படையில் பலரது தொலைபேசி அழைப்புகளை ஏற்பது வழக்கம். சிபிஐ மீதும் பாட்னா உயர் நீதிமன்றத்தின் மீதும் நம்பிக்கை உள்ளது. எனது கணவர் குற்றமற்றவர் என்பது விசாரணையில் நிரூபணம் ஆகும்' என்றார்.
பிகார் மாநிலம் பெகுசராய் மாவட்டம் செரியா-பாரியார்பூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்ட மஞ்சு வர்மா, பின்னர் சமூக நலத் துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.
இதனிடையே, இந்த வழக்கு தொடர்பாக பிரஜேஷ் தாக்குர் மற்றும் 9 நபர்கள், போக்சோ'' சிறப்பு நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர், நீதிமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் தாக்குர் கூறுகையில், அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலிலும், 2020ல் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலிலும் காங்கிரஸ் சார்பில் போட்டியிட முடிவு செய்திருந்தேன். இதற்காக காங்கிரஸ் தலைவர்களுடன் தொடர்பில் இருந்து வந்தேன். ஆனால், என்னை அரசியல் பலிகடாவாக்கி விட்டனர். மஞ்சு வர்மாவின் கணவருடன் தொலைபேசியில் பேசியது உண்மைதான். ஆனால், அரசியல் ரீதியாகவே பேசினோம்' என்றார்.
காங்கிரஸ் மறுப்பு: ஆனால், அவரது கருத்துகளை காங்கிரஸ் மறுத்துள்ளது. இதுதொடர்பாக மாநில காங்கிரஸ் தலைவர் கௌகாப் காத்ரி கூறுகையில், பிரஜேஷ் தாக்குர், காங்கிரஸில் அடிப்படை உறுப்பினர்கூட கிடையாது. ஐக்கிய ஜனதா தள தலைவர்களுடன்தான் அவருக்கு தொடர்புள்ளது' என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.