லக்னௌ: 1945ம் ஆண்டு 21 வயதான அடல் பிகாரி வாஜ்பாய் கான்பூரில் உள்ள கல்லூரியில் சட்டம் பயின்றார். அப்போது அவரது வகுப்புத் தோழனாக இருந்தவர் 30 ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
அவர் வேறு யாருமல்ல.. வாஜ்பாயியின் தந்தைதான்.
பண்டிட் கிருஷ்ண பிஹாரிலால் வாஜ்பாயி 50 வயதாக இருந்த போது, கான்பூரில் உள்ள டிஏவி கல்லூரியில் வாஜ்பாயுடன் ஒன்றாகப் படித்தார்.
வாஜ்பாய் பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு 2002ம் ஆண்டு கல்லூரியின் இதழில், வாஜ்பாய் பகிர்ந்து கொண்ட இந்த ஆச்சரியத் தகவல் வெளியாகியிருந்தது.
மேற்கொண்டு வாஜ்பாயியே கூறுகிறார், நீங்கள் யாராவது இதுவரை கேள்விப்பட்டிருக்கிறீர்களா, தந்தையும், மகனும் ஒரே கல்லூரியில் சேர்ந்து படித்தார்கள் என்பதை. அதுவும் இருவரும் ஒரே வகுப்பில் படித்தார்கள்.
அப்படி கேள்விப்படவில்லை என்றால் கான்பூர் கல்லூரியைப் பற்றி உங்களுக்குத் தெரியவில்லை என்றுதான் கூற வேண்டும் என்று பதிவிட்டிருந்தார்.
இது பற்றி கல்லூரியின் முதல்வர் கூறுகையில், இருவரும் அதிர்ஷ்டவசமாக ஒரே படிப்பில் சேர்ந்தனர். ஆனால் பிறகு தங்களது செக்சனை மட்டும் மாற்றிக் கொண்டனர் என்கிறார்.
வாஜ்பாயி கூறுகையில், எனது தந்தை வகுப்புக்கு தாமதமாக வந்தால், பேராசிரியர் சிரித்தபடியே, எங்கே உனது தந்தை மாயமாகிவிட்டார் என்று கேட்பார். நான் தாமதமாக வந்தால், தந்தையிடம் உங்கள் மகன் எங்கே காணவில்லை என்று சிரித்துக் கொண்டே கேட்பார். இது எங்களுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியதால் நாங்கள் வேறு வேறு வகுப்புக்கு மாறிவிட்டோம் என்றும் அந்த இதழில் எழுதியுள்ளார்.