புது தில்லி: 'கும்பல் கொலைகளின் தந்தை' என்று முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியை அழைத்து தில்லியில் பாஜகவினர் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த 1984-ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி தனது சீக்கிய பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் மிகுந்த அதிர்ச்சியினை ஏற்படுத்தியது. இதன் பின்விளைவாக தில்லியில் நடந்த தொடர் கலவரத்தில் சுமார் 3000 சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். இச்சசம்பவத்தில் காங்கிரஸ் மீதும் அதன் முக்கியத் தலைவர்கள் மீதும் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வந்தது.
தற்பொழுது லண்டன் சுற்றுப்பயணம் சென்றிருந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடந்த வெள்ளிக்கிழமை அங்கு நடந்த கூட்டம் ஒன்றில் பேசும் பொழுது, 1984- கலவரத்திற்கும் காங்கிரசுக்கும் தொடர்பில்லை என்று தெரிவித்தார். அவரது பேச்சுக்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் 'கும்பல் கொலைகளின் தந்தை' என்று முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியை அழைத்து தில்லியில் பாஜகவினர் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டது.
தில்லி மாநில பாஜக செய்தித் தொடர்பாளரான தஜிந்தர் பால் சிங் பக்கா செவ்வாயன்று இத்தகைய போஸ்டர்களை தில்லி பாஜக அலுவலகம் மற்றும் சுற்றுப் பகுதியில் ஒட்டியுள்ளார். இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், '1984-ஆம் ஆண்டு தில்லியில் நடந்த கும்பல் கொலைகளுக்கு திட்டம் வகுத்தவரும், பின்னிருந்து இயக்கியவரும் தனது தந்தை ராஜிவ் காந்திதான் என்பதை ராகுலுக்கு உணர்த்தவே தில்லி முழுவதும் இத்தகைய போஸ்டர்களை ஒட்டியுள்ளேன்' என்று கூறினார்.
ஆனால் பாஜகவின் இந்த செயலுக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ப்ரியங்கா சதுர்வேதி கூறுகையில், 'இந்த நாட்டிற்காக தனது உயிரை இழந்த ஒரு முன்னாள் பிரதமரை இழிபடுத்தும் விதத்தில் அமைந்த, வெறுக்கத்தக்க போஸ்டர் ஒன்று பாஜக அலுவலகத்தின் வெளியில் ஒட்டப்பட்டுள்ளது. இது அக்கட்சியினரின் சிறிய புத்தியினைக் காட்டுகிறது என்று தெரிவித்தார்.