மகாராஷ்டிராவில் அதிர்ச்சி: மனைவி கொல்லப்பட்ட அதே இடத்தில் கணவரின் சடலம்
மகாராஷ்டிராவில் கடந்த அக்டோபர் மாதம் மனைவி கொலை செய்யப்பட்டுக் கிடந்த அதே இடத்தில் கணவரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மும்பை: மகாராஷ்டிராவில் கடந்த அக்டோபர் மாதம் மனைவி கொலை செய்யப்பட்டுக் கிடந்த அதே இடத்தில் கணவரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூர் மாவட்டத்தில் வயல் வெளியில் ஒரு ஆணின் சடலம் கிடப்பதை அவ்வூர் மக்கள் பார்த்து காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
விசாரணையில் அவர் 22 வயது ஸ்ரீஷைல் சனப்பா பிராஜ்தார் என்பது தெரிய வந்தது. இதே இடத்தில்தான் கடந்த அக்டோபர் மாதம் இவரது மனைவி அனுராதா பிராஜ்தார் அவரது பெற்றோரால் ஆணவக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.
இந்த நிலையில், ஸ்ரீஷைல் சனப்பா கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது தெரியவில்லை. பிரேத பரிசோதனைக்குப் பிறகே இந்த விவரம் தெரிய வரும் என்று கூறப்படுகிறது.
அனுராதாவின் தந்தை வைத்திருந்த பண்ணையில், ஸ்ரீஷைல் சனப்பாவின் தந்தை கூலி வேலை செய்து வந்துள்ளா. தந்தையைப் பார்க்கச் செல்லும் ஸ்ரீஷைல், எம்பிபிஎஸ் படித்து வந்த அனுராதா மீது காதல் கொண்டு, அக்டோபர் 1ம் தேதி இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், அனுராதா கடந்த அக்டோபர் 4ம் தேதி ஆணவக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அனுராதாவின் தந்தையும், வளர்ப்பு தாயும் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.