மும்பை: கடந்த 1993 ஆம் ஆண்டு மும்பையில் நடந்த குண்டு வெடிப்பு தாக்குதலில் இந்தியாவால் தேடப்படும் சோட்டா ஷகீலின் சகோதரர் அன்வர் பாபு ஷேக் துபாய் போலீஸாரால் கைது செய்துள்ளனர்.
1993 மார்ச் 12 ஆம் தேதி மும்பை மாநகரில் தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது. மும்பையின் 12 முக்கிய இடங்களில் அடுத்தடுத்து இந்த குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்தன. இதன்காரணமாக 200-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் பலியாகினர். சுமார் 700-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இதில் மும்பையின் நிழல் உலக தாதாவான தாவூத் இப்ராஹிமுக்கு தொடர்பு இருப்பது முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது. மேலும், அவனது கூட்டாளிகளான அபு சலீம், முஸ்தஃபா தோஸ்ஸா, கரிமுல்லா கான், ஃபெரோஸ் அப்துல் ரஷீத் கான், ரியாஸ் சித்திக், தாஹிர் மெர்சண்ட் மற்றும் அப்துல் க்யுயாயும் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
மேலும், தாக்குதல்களுக்கு காரணமான தாவூத் இப்ராஹிமின் தற்காப்பு வலது கரமாக கருதப்படும் சோட்டா ஷகீல் மற்றும் அவரது சகோதரர் அன்வர் பாபு ஷேக் உள்ளிட்டோரை தேடப்படும் குற்றவாளியாக இந்திய அரசு அறிவித்துள்ளது.
இதுதவிர, மும்பை மற்றும் தானே பகுதிகளில் நடந்த பல்வேறு குற்றச் சம்பவங்களிலும் போலீஸாரின் தேடப்படும் நபர்களின் பட்டியலில் அன்வர் பாபு ஷேக் இருந்து வருகிறார். இவருக்கு பாகிஸ்தான் நாட்டு உளவுத்துறை பாதுகாப்பு வழங்குவதாக இந்திய அரசு தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தது.
இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டு பாஸ்போர்ட்டுடன் அபுதாபி விமான நிலையத்தில் அன்வர் பாபு ஷேக்கை துபாய் போலீஸார் கைது செய்தனர். அவரை இந்தியாவுக்கு அழைத்துவரும் நடவடிக்கைகளில் மும்பை போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
டிசம்பர் 1993 - ஜனவரி 1994-ஆம் ஆண்டுகளில் அன்வர் ஆயுதங்களை வாங்கியிருக்கலாம் என்று அண்மையில் பயங்கரவாத எதிர்ப்பு குழு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இதற்கிடையில், பாகிஸ்தானிலும் இவர்மீது சில வழக்குகள் இருப்பதால் அன்வர் பாபு ஷேக் யாரிடம் ஒப்படைக்கப்படுவார்? என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை.