திருப்பதி: காவிரி பிரச்னைக்கு பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணலாம் என்பதே எங்களுடைய விருப்பம் என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்தார்.
திருப்பதி ஏழுமலையான் திருக்கோயிலில் வைகுந்த ஏகாதசி திருவிழாவின் முக்கிய நிகழ்வான பரமபதவாசல் திறப்பு இன்று அதிகாலை (செவ்வாய்க்கிழமை) திறக்கப்பட்டதும் விடிய விடிய காத்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் "கோவிந்தா கோவிந்தா என முழக்கமிட்டு பரவசமடைந்தனர்.
திருப்பதியில் பரமபதவாசல் திறப்பையொட்டி சாமிதரிசனம் செய்த கர்நாடக முதல்வர் குமாரசாமி பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இரு மாநில அரசுகள் ஒன்றாக பேச்சுவார்த்தை நடத்தினால் மேகதாது பிரச்னைக்கு சுமூக தீர்வு காணலாம் என்பதே எங்களுடைய விருப்பம். இயற்கை வளங்களை ஒன்றிணைந்து பிரித்து கொண்டால் இரு மாநில விவசாயிகளுக்கும் நலன் கிடைக்கும்.
மழை இல்லாமல் நீர்வரத்து குறைந்துவிட்டால் கர்நாடகாவில் இருந்து காவிரியில் தண்ணீர் திறந்துவிடுவதில் சிரமம் ஏற்படும். சரியாக மழை பெய்தால் காவிரியில் தண்ணீர் திறந்துவிடுவதில் எங்களுக்கு எந்த பிரச்னையும் இருக்காது என்றார்.
மேலும், தமிழக, கர்நாடக மக்கள் எதிரிகளல்ல; சகோதர சகோதரிகள் என குமாரசாமி கூறினார்.