விவசாயக் கடன் தள்ளுபடி செய்யும் வரை பிரதமர் மோடியை தூங்க விட மாட்டேன் என காங்கிரஸ் தலைவர் ராகுல் தெரிவித்தார்.
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் ஆட்சி அமைத்துள்ள காங்கிரஸ், தேர்தல் வாக்குறுதியின் அடிப்படையில் விவசாயக் கடனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. குறிப்பாக மத்தியப் பிரதேச முதல்வராகப் பதவியேற்ற கமல்நாத், ஒவ்வொரு விவசாயிக்குமான ரூ.2 லட்சம் கடனை தள்ளுபடி செய்து முதல் கையெழுத்திட்டார்.
அதுபோன்று சத்தீஸ்கர் முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள பூபேஷ் பாகெல், 10 நாட்களுக்குள்ளாக விவசாயக் கடனை தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளார். இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல், செய்தியாளர்களிடம் செவ்வாய்கிழமை தெரிவித்ததாவது:
சீக்கிய கலவர வழக்கு தொடர்பாக எனது நிலைப்பாட்டை நான் ஏற்கனவே தெரிவித்துவிட்டேன். மேலும் இது விவசாயிகள் தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பாகும். விவசாயிகளின் கடனில் இருந்து பிரதமர் மோடி ஒரு ரூபாய் கூட இதுவரை தள்ளுபடி செய்யவில்லை.
இந்த உலகிலேயே பணமதிப்பிழப்பு நடவடிக்கை தான் மிகப்பெரிய ஊழலாகும். ரஃபேல், விவசாயக் கடன், பணமதிப்பிழப்பு ஆகியவற்றில் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். விவசாயிகளும், சிறு மற்றும் குறு வியாபாரிகளின் உழைப்பு திருடப்பட்டுள்ளது.
விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என அனைத்து எதிர்கட்சிகளும் ஒருமித்த கருத்தாக கூறி வருகின்றன. இந்த நிலையில், விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்யும் வரை பிரதமர் நரேந்திர மோடியை தூங்க விட மாட்டேன் என்று பேசினார்.