உடல் நலனைப் பற்றிய அக்கறையில் தென்னிந்தியர்களுக்குத்தான் முதலிடமாம்
ஆந்திரா, தமிழ்நாடு, தெலங்கானா உள்ளிட்ட தென்னிந்திய மக்கள்தான் தங்களது உடல் நலம் பற்றி அதிகம் அக்கறை காட்டுவதாக அரசு வெளியிட்ட தேசிய குடும்ப நல ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
புது தில்லி: ஆந்திரா, தமிழ்நாடு, தெலங்கானா உள்ளிட்ட தென்னிந்திய மக்கள்தான் தங்களது உடல் நலம் பற்றி அதிகம் அக்கறை காட்டுவதாக அரசு வெளியிட்ட தேசிய குடும்ப நல ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
தங்களுக்கும், தங்கள் குடும்பத்துக்கும் மருத்துவக் காப்பீடு பெறுவதில் ஆந்திரா, தமிழ்நாடு, தெலங்கானா மாநில மக்கள் அதிகம் கவனம் செலுத்துவதாகவும், உத்தரப்பிரதேசம், பிகார், அஸ்ஸாம் மாநிலங்களில் காப்பீடு பெறுவதில் மக்கள் அக்கறை செலுத்தாததும் தெரிய வந்துள்ளது.
மருத்துவக் காப்பீடு பெற்ற அதிக மக்களைக் கொண்ட மாநிலங்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள ஆந்திராவில், சுமார் 75 சதவீத மக்கள் மருத்துவக் காப்பீடு பெற்றுள்ளனர். அதே சமயம், லட்சத்தீவுகள், மணிப்பூர், ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் 5 சதவீதத்துக்கும் குறைவான குடும்பங்களே மருத்துவக் காப்பீடு பெற்றுள்ளன.
Advertisement
தேசிய குடும்ப நல ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டிருப்பது என்னவென்றால், 15-49 வயது வரையிலான மக்களில் 20 சதவீத பெண்களும், 23 சதவீத ஆண்களும் மருத்துவக் காப்பீடு செய்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 51 சதவீத மக்கள் தனியார் மருத்துவமனைகளையே நாடுவதாகவும், 45 சதவீத மக்கள்தான் அரசு மருத்துவமனைகளை நாடுவதாகவும் தெரிய வந்துள்ளது.
அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் மக்களை அதிகம் கொண்ட மாநிலமாக உத்தரப்பிரதேசம் (80%) இருக்கிறது. அதற்கு அடுத்த இடத்தில் பிகார் (78%) உள்ளது. கடைசி இடத்தை திரிபுரா (9%) பிடித்துள்ளது.
அரசு மருத்துவமனைகளை பயன்படுத்தாத பொதுமக்களின் முதல் காரணம், போதிய சிகிச்சை இல்லாதது, அருகில் அரசு மருத்துவமனைகள் இல்லாதது என்பதே.
15-49 வயதுடைய பெண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், 67 சதவீத பெண்களுக்கு உடலில் குறைந்தபட்சம் ஒரு பிரச்னையாவது உள்ளது. அதில் 25 சதவீத பெண்களுக்கு சிகிச்சை பெற பணம் ஒரு தடையாக உள்ளது. 30 சதவீத பெண்களுக்கு அருகில் மருத்துவமனை இல்லாததும், 27 சதவீத பெண்களுக்கு மருத்துவமனைக்குப் போய் வருவதில் பிரச்னை இருப்பதும் தெரிய வந்துள்ளது.