புதுதில்லி: காங்கிரஸ் அரசு கொண்டு வந்த திட்டங்களை வெறுமனே பெயர் மாற்றம் செய்யும் வேலையை மட்டும்தான் பாஜக அரசு செய்கிறது என்று காங்கிரசின் குலாம் நபி ஆசாத் மாநிலங்களவையில் அமித்ஷாவின் பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள பாஜக தலைவர் அமித்ஷா திங்களன்று தனது முதல் உரையை நிகழ்த்தினார். தனது பேச்சில் அவர் காங்கிரஸை கடுமையாக விமர்சனம் செய்தார். இதற்குப் பின்னர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் , மாநிலங்களவை காங்கிரஸ் அவைத் தலைவருமான குலாம் நபி ஆசாத் பேசினார். அமித்ஷாவின் பேச்சுக்கு பதிலடி கொடுத்து அவர் பேசியதாவது:
அமித் ஷா உங்களுடைய முதல் பேச்சுக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் காங்கிரஸ் ஊழல் கட்சி என உங்கள் உரையில் குற்றம் சாட்டியுளீர்கள். ஆனால் உங்களுடைய ஆட்சியில்தான் 2-ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டு உள்ளனர்.
அத்துடன் காங்கிரஸ் கட்சி தனது முந்தைய காலங்களில் கொண்டு வந்த திட்டங்களை பெயரை மாற்றும் வேலையை மட்டும்தான் பாஜக செய்கிறது. எனவே பாரதீய ஜனதா தலைமையிலான அரசு ‘கேம் ஜேஞ்சர் கிடையாது வெறும் நேம் ஜேஞ்சர் மட்டும்தான்’
உங்களது முத்தலாக் சட்டத்தின் மூலம் நீங்கள் இப்போது மனைவி மற்றும் கணவரைப் பிரிக்கிறீர்கள். கணவரை சிறையில் அடைத்துவிட்டு, மனைவியிடம் அவரை காப்பாற்றி விட்டதாகக் கூறுவீர்கள். நாங்கள் முத்தலாக் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம். ஆனால் அதனை கிரிமினல் குற்றமாக்குவதைதான் நாங்கள் எதிர்க்கிறோம்.
இவ்வாறு குலாம் நபி ஆசாத் பேசினார்.