நாடு முழுவதும் நிகழ் நிதியாண்டின் (2017-18) முதல் 9 மாதங்களில் டிக்கெட் எடுக்காமலும், உரிய டிக்கெட் இல்லாமலும் ரயிலில் பயணித்தவர்களிடம் இருந்து ரூ.867 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என்று மக்களவையில் தெரிவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக அந்த அவையில் வெள்ளிக்கிழமை எழுப்பப்பட்ட கேள்விக்கு ரயில்வே துறை இணை அணைச்சர் ராஜன் கோஹைன் எழுத்துபூர்வமாக தாக்கல் செய்த பதில்:
இந்த காலகட்டத்தில் (ஏப்ரல் முதல் டிசம்பர் மாதம் வரை) நாடு முழுவதும் ரயில் நிலையங்களில் 18.18 லட்சம் முறை கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
அதன்மூலம், 1.83 கோடி பேர் டிக்கெட் எடுக்காமலும், முறையான டிக்கெட் இன்றியும் பயணித்தது கண்டறியப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது. அதன்மூலம், இதுவரை ரூ.867.36 கோடி சேர்ந்துள்ளது.
முறையான டிக்கெட் இன்றி பயணிக்கும் பயணிகளை கண்டறிவதற்காக சில நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றார் அவர்.
மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ராஜன் கோஹைன், "பயணிகள் பயணிக்கும் பெட்டிகளில் ஏற்படும் குறைபாடுகளை குறுஞ்செய்தி மூலம் தெரிந்துகொண்டு சரிசெய்யும் "கோச் மித்ரா' சேவை, கடந்த ஏப்ரல் முதல் டிசம்பர் வரை 7ஆயிரம் முறை பயன்படுத்தப்பட்டுள்ளது' என்றார்.