சிபிஐ சிறப்பு நீதிபதி லோயா மரணம் தொடர்பாக சிறப்பு விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களுக்கு மகாராஷ்டிர மாநில அரசு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்திய பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தொடர்புடைய சொராபுதீன் ஷேக் போலி என்கவுன்ட்டர் வழக்கை நீதிபதி லோயா விசாரித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 2014}ஆம் ஆண்டில் மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் தன்னுடன் பணியாற்றுபவரின் இல்லத் திருமணத்தில் பங்கேற்றபோது, திடீர் மாரடைப்பால் அவர் உயிரிழந்தார். அதற்கு முன்பு இதயம் தொடர்பான எவ்விதப் பிரச்னையும் இல்லாத லோயாவின் இந்த மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன.
அவரது மரணம் குறித்து சுதந்திரமான முறையில் விசாரணை நடத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் தலைவர் உள்பட பல்வேறு தரப்புகளில் இருந்து மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில், நீதிபதி லோயாவின் பிரேதப் பரிசோதனை அறிக்கையை தங்களுக்கு அளிக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் உள்ளூர் தலைவர் மற்றும் பத்திரிக்கையாளர் ஒருவரும் கோரிக்கை விடுத்தனர். இதற்கு நீதிமன்றம் ஒப்புதல் அளித்தது.
இந்நிலையில், லோயா மரணத்தில் சிறப்பு விசாரணை கோரும் மனுக்களுக்கு மகாராஷ்டிர அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு மகாராஷ்டிர அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர்கள் முகுல் ரோத்தகி கூறியதாவது:
லோயா மரணம் தொடர்பாக நீதிமன்ற அலுவலர்கள் நால்வர் தங்கள் அறிக்கையை அளித்துவிட்டனர். இந்த சூழ்நிலையில், அவரது மரணம் தொடர்பாக சிறப்பு விசாரணை கோரும் மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும். ஏனெனில், விளம்பரம் தேடும் நோக்கத்துடனும், பரபரப்பை ஏற்படுத்துவதற்காகவும் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்றார் அவர்.