கர்ப்பிணிக்கு பிரசவம் பார்க்க மறுப்பு : ஆதார் இல்லையென்றால் குறைந்தபட்ச கருணை கூட கிடைக்காதா?
அரியானா மாநிலத்தில் குர்கான் அரசு மருத்துவமனையில், ஆதார் கார்டு இல்லாததால் கர்ப்பிணிக்கு பிரசவம் பார்க்க மறுத்ததால், மருத்துவமனை வளாகத்திலேயே குழந்தை பிறந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குர்கான்: அரியானா மாநிலத்தில் குர்கான் அரசு மருத்துவமனையில், ஆதார் கார்டு இல்லாததால் கர்ப்பிணிக்கு பிரசவம் பார்க்க மறுத்ததால், மருத்துவமனை வளாகத்திலேயே குழந்தை பிறந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கூர்கானைச் சேர்ந்த அருண் கேவாட்டின் மனைவி முன்னி கேவாட் (25). நிறைமாத கர்ப்பிணியான முன்னிக்கு பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து காலை 9 மணியளவில் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். பிரசவ பிரிவுக்குச் சென்ற முன்னியிடம் ஆதார் அட்டை இல்லாததால் அவரை உள்ளே அனுமதிக்க செவிலியர்கள் மறுத்துவிட்டனர்.
கையில் ஆதார் எண் இருப்பதாகவும், பிறகு ஆதார் அட்டையைக் கொண்டு வந்து காண்பிப்பதாகவும் கூறியும் செவிலியர்கள் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை.
Advertisement
இதனால், பிரசவ பிரிவு வளாகத்திலேயே முன்னிக்கு குழந்தை பிறந்தது. அப்போதும் அங்கிருந்த மருத்துவர்களோ, செவிலியர்களோ சிகிச்சை அளிக்க முன்வரவில்லை. இதனை நோயாளிகள் பலரும் செல்போனில் படம் பிடித்தனர். குழந்தை பிறந்த பிறகு அந்த வளாகம் முழுவதும் ரத்தம் வழிந்த பிறகே மருத்துவமனை ஊழியர்கள் முன்னிக்கு உதவி செய்ய முன்வந்தனர்.
மருத்துவமனை ஊழியர்களின் மனிதாபிமானமற்ற இந்த செய்கையால் அதிருப்தி அடைந்த முன்னியின் உறவினர்கள் மருத்துவமனையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதையடுத்தே செய்தி மாவட்ட நிர்வாகத்துக்குத் தெரிய வந்தது.
இந்த தகவல் மாவட்ட சுகாதாரத் துறைக்கு தெரிய வந்ததை அடுத்து, சம்பவத்தின் போது பணியில் இருந்த மருத்துவரும், செவிலியரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.