முகப்பு
இந்தியா

படமெடுத்த பாம்பை ஆத்திரத்தில் கடித்துத் துப்பிய விவசாயி! 

தன்னைக் கடித்த பாம்பை ஆத்திரத்தில் அதன் 'படத்திலேயே' விவசாயி ஒருவர் கடித்துத் துப்பிய வினோத சம்பவம் நடந்துள்ளது.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:18 PM
பகிர்:

லக்னௌ: தன்னைக் கடித்த பாம்பை ஆத்திரத்தில் அதன் 'படத்திலேயே' விவசாயி ஒருவர் கடித்துத் துப்பிய வினோத சம்பவம் நடந்துள்ளது.

உத்தரப் பிரதேசத்தின் ஹர்தோய் மாவட்டத்தில் உள்ளது ஷுக்லபுர் பகார் கிராமம். இங்கு சோன்லால் என்னும் விவசாயி வசித்து வருகிறார். இவர் கடந்த சனிக்கிழமையன்று விவசாய நிலத்தில் தனது கால்நடைகளுக்கான வைக்கோலை சேகரித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது அங்கிருந்த பாம்பு ஒன்று அவரைக் கடித்துள்ளது.

இதன் காரணமாக கடும் ஆத்திரமடைந்த அவர் உடனடியாக தன்னைக்  கடித்த பின்னர் படமெடுத்து நின்ற அந்த பாம்பினைப் பிடித்துள்ளார். அதன் 'படத்திலேயே' கடித்த அவர் மென்று துப்பியுள்ளார். பின்னர் உடனடியாக அவர் மயங்கி விழுந்துள்ளார். மயங்கிய நிலையில் அவரைக் கண்ட விவசாயிகள், உடனடியாக அருகில் உள்ள மொகாகஞ்ச் சமுதாய மருத்துவக் கூடத்துக்குக் கொண்டு சென்றனர்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மூன்று மணி நேரத்துக்கு மேலாக மயக்கத்தில் இருந்த சோன்லால் பின்னர் சுய நினைவுக்கு வந்தார். அதற்குப் பிறகு அவர் வீடு திரும்பினார்.

தன்னை பாம்பு கடித்ததாக சோன்லால் கூறினாலும் அவரது உடலில் பாம்பு கடித்த தடங்கள் எதுவும் இல்லை என அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் கூறினார்கள். ஆனால் கடித்த பொழுது உடலில் பரவியிருக்கும் சிறிய அளவு விஷம் மற்றும் அதிர்ச்சியின் காரணமாக, அவர் மயக்கமாகியிருக்கலாம் என்றும் அவர்கள் தெரிவித்தார்கள்.

இது ஒரு வினோதமான சம்பவம் என்று மொகாகஞ்ச் சமுதாய மருத்துவக் கூடதலைமை மருத்துவர் தெரிவித்தார். ஆனால் சோன்லால் போதைப்பொருட்களை தொடர்ந்து பயன்படுத்தி வருபவர் என்பதால், அவர் உடல் விஷத்தை செரித்து இருக்கலாம் என்று கிராமவாசிகள் தெரிவித்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.