பயங்கரவாதத்துக்கு துணை போகும் நாடுகள் கண்டறியப்பட வேண்டும்: ராணுவ தளபதி பிபின் ராவத்
பயங்கரவாதத்தை ஒழிக்க இணையம் மற்றும் சமூக வலைதளங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும் என்று ராணுவ தளபதி பிபின் ராவத் புதன்கிழமைதெரிவித்துள்ளார்.
புவி அரசியலை குறிக்கும் 3-ஆவது ரைஸினா மாநாடு புதுதில்லியில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் ராணுவ தளபதி பிபின் ராவத் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இவ்விழாவை இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நேதன்யாஹூ துவக்கி வைத்தார். இதில் இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் பேசியாதவது:
பயங்கரவாதம் என்பது இவ்வுலகுக்கு புதிதல்ல. ஆனால் அதை எதிர்கொள்ளும் விதத்தில் தற்போது மாற்றம் நிகழ்ந்து வருகிறது. முதலாவதாக பயங்கரவாதம் கண்டறியப்பட வேண்டும். ஒருவர் செய்யும் செயலை வைத்து யார் பயங்கரவாதி என்பதை உறுதி செய்ய வேண்டும்.
Advertisement
இதில், யார் ஒருவர் தனது சொந்த நாட்டுக்கும், அதை சுற்றியுள்ள பகுதிகளிலும், நாட்டு மக்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்படும் விதமாக செயல்படுகிறானோ அவனே பயங்கரவாதி ஆவான்.
எந்த ஒரு நாடு தனது சுயலாபத்துக்காக பயங்கரவாதத்தை பயன்படுத்துகிறதோ, அதுபோன்ற பயங்கரவாதத்துக்கு துணை போகும் நாடுகள் கண்டறியப்பட்டு அவற்றின் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை செய்வதில் உலக நாடுகள் ஒன்றிணையவில்லை என்றால் பயங்கரவாதத்தை அழிப்பது மிகவும் கடினமாகும்.
பயங்கரவாதிகள் தற்போது தலைசிறந்த தொழில்நுட்பங்களை உபயோகிக்கத் துவங்கிவிட்டனர். இதனைப் பயன்படுத்தி ஒரு நாட்டுக்குள் மிகவும் எளிதாக ஊடுருவி அங்கு பயங்கரவாத செயல்களை அரங்கேற்றுகின்றனர்.
எனவே பயங்கரவாதம் ஒழிக்கப்பட இணையதளங்கள் மற்றும் சமூக வலைதளங்களை தொடர்ந்து கண்காணிப்பது அவசியமாகிறது. இது நாட்டு மக்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தினாலும் அவர்களின் ஒத்துழைப்பின்றி பயங்கரவாதத்தினை அழிப்பது மிகவும் கடினம் என்றார்.