முகப்பு
இந்தியா

இந்தியாவின் பின்லேடன்: தேடப்பட்டு வந்த முக்கிய பயங்கரவாதி புது தில்லியில் கைது

2008ம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்புச் சம்பவங்களில் மூளையாக செயல்பட்டவன் என்ற அடிப்படையில் தேடப்பட்டு வந்த இந்தியன் முஜாகிதீன் பயங்கரவாதி தில்லியில் இன்று செய்யப்பட்டான்.

Updated On : 22 ஜனவரி, 2018 at 3:10 PM
பகிர்:


புது தில்லி: 2008ம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்புச் சம்பவங்களில் மூளையாக செயல்பட்டவன் என்ற அடிப்படையில் தேடப்பட்டு வந்த இந்தியன் முஜாகிதீன் பயங்கரவாதி தில்லியில் இன்று செய்யப்பட்டான்.

2008ம் ஆண்டில் அகமதாபாத்தில் அடுத்தடுத்து 21 குண்டுகள் வெடித்தது, தில்லி, பெங்களூரு மற்றும் மும்பையில் 2006ம் ஆண்டு ரயில்களில் வெடிகுண்டுகள் வெடித்த சம்பவங்கள் உள்ளிட்ட பல்வேறு குண்டுவெடிப்புச் சம்பவங்களில் மூளையாக செயல்பட்டவன் என்று கருதப்படும் அப்துல் சுபான் குரேஷி, 10 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த முக்கிய பயங்கரவாதிகளில் ஒருவனாக இருந்து வந்தான்.

போலியான ஆவணங்கள் மூலம் நேபாளத்துக்கு தப்பிச் சென்ற சுபான் குரேஷி, அங்கு தலைமறைவாக இருந்து வந்தான். இந்த நிலையில், இந்தியாவில் இந்தியன் முஜாகிதீன் அமைப்பை மேம்படுத்த நாட்டுக்கு திரும்பி வந்த போது தில்லி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளான்.

Advertisement

இதனை புது தில்லி காவல்துறை உறுதி செய்துள்ளது. தனிப்படையினர், சிறப்புப் படையினர், இதர புலனாய்வு அமைப்புகள் பலவும் 46 வயதாகும் குரேஷியை, தொடர்ந்து கண்காணித்து வந்தது. அதன்மூலம் இருப்பிடத்தைக் கண்டறிந்து, சுற்றி வளைக்கப்பட்டபோது, துப்பாக்கிச் சூடு தாக்குதலுக்குப் பிறகு குரேஷி கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் பின் லேடன் என்று அழைக்கப்படும் குரேஷி, தனது தோற்றத்தை அடையாளமே தெரியாத அளவுக்கு மாற்றிக் கொள்வதில் கைதேர்ந்தவன். பெங்களூரு உட்பட பல நகரங்களில் செயல்படும் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களிலும் குரேஷி பணியாற்றியவன் என்பதும் குறிப்பிடத்தக்து.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.