இலங்கை சட்ட மசோதா தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சகத்துடன் ஆலோசனை: நிர்மலா சீதாராமன்
இலங்கையின் புதிய மீனவ சட்ட மசோதா தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்துடன் ஆலோசிக்கவுள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
பாக். நீரிணைப் பகுதியில் தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பதைத் தடுக்கும் வகையில், இலங்கை அரசு கடுமையான புதிய கடல் சட்ட மசோதாவை கொண்டு வந்துள்ளது.
இந்த சட்ட மசோதாவின் அடிப்படையில், இலங்கை அரசின் மீன் வளம் மற்றும் நீர் வளத்துறை சட்டத்தில் 2017-இல் தடைசெய்யப்பட்ட மீன்வலைகளைக் கொண்டு மீன் பிடிப்பது குற்றம் எனச் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
அதைத் தொடர்ந்து தற்போது அந்நிய மீன்பிடி கப்பல் என்ற பெயரில் புதிய மசோதா ஒன்று கடந்த 24-ஆம் தேதியன்று இலங்கை அரசு அறிமுகம் செய்துள்ளது. அதில், கைது செய்யப்படும் மீனவர்களை நீண்ட காலம் சிறையில் வைப்பதற்கும், அதிக அளவில் அபராதத் தொகை வசூலிக்கும் வகையிலும் இந்த சட்டத் திருத்த மசோதாவில் வகை செய்யப்பட்டுள்ளது.
Advertisement
அதன்படி, கைது செய்யப்படும் மீனவர்களிடம் இருந்து சில கோடிகளில் அபராத தொகை வசூலிக்கும் வகையிலும் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இலங்கை அரசின் இந்த புதிய சட்ட மசோதா அமல்படுத்தாமல் உடனடியாகத் தடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெள்ளிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, இவ்விவகாரம் தொடர்பாக உடனடியாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்துடன் கலந்துபேசி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.