ஒடிஸாவின் தல்சாரி கடல் திருவிழா பாலசூர் மாவட்டத்தில் போக்ராய் என்ற இடத்தில் புதன்கிழமை தொடங்கி நடைபெற்றது. இதனை அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் துவக்கி வைத்தார்.
அப்போது கூட்டத்தில் இருந்து நவீன் பட்நாயக்கை நோக்கி முட்டைகள் வீசப்பட்டன. இதனால் அங்கிருந்த காவல்துறை அதிகாரிகள் உடனடியாக செயல்பட்டு முதல்வர் மீது முட்டை வீசியவரை கைது செய்தனர்.
இதில், ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக் மீது முட்டை வீசியது ஒரு பெண் என்பது தெரியவந்தது. அவருடைய கணவர் பாஜக-வைச் சேர்ந்தவர் எனவும், தன்னுடைய கணவரின் கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பெண் இந்த செயலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
அந்த பெண் உரிய முறையில் தனது புகாரை முதல்வரிடம் தெரிவித்து இருக்கலாம். ஆனால், அவர் இதுமாதிரி ஒரு செயலில் ஈடுபட்டது தொடர்பாக நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். இவர் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேவைப்பட்டால் அவருக்கு மருத்துவ பரிசோதனையும் மேற்கொள்ளப்படும் என பாலசூர் காவல்துறை அதிகாரி நிதி சேகர் தெரிவித்தார்.