காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக் கொலை
ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் திங்கள்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் திங்கள்கிழமை நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இது குறித்து காவல்துறையினர் கூறியதாவது: வடக்கு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்திலுள்ள ஹந்த்வாரா வனப் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் பாதுகாப்புப் படையினர் அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து, பாதுகாப்புப் படையினரும் பதிலடி தாக்குதல் நடத்தினர். இதில், பயங்கரவாதி ஒருவர் கொல்லப்பட்டார். அவரை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. அந்தப் பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.