முகப்பு
இந்தியா

ஜியோ பல்கலைக்கு உலகத் தர பல்கலைத் தகுதியா? மத்திய அரசு சொல்வதை காது கொடுத்து கேட்போமா??

முகவரியே இல்லாத ஜியோ பல்கலைக்கழகத்துக்கு உலகத் தர பல்கலைக்கழகம் என்ற தகுதி கிடைத்தது எப்படி என்பதுதான் இன்றைய பூதாகர சர்ச்சையே.

Updated On : 10 ஜூலை, 2018 at 4:35 PM
பகிர்:


புது தில்லி: முகவரியே இல்லாத ஜியோ பல்கலைக்கழகத்துக்கு உலகத் தர பல்கலைக்கழகம் என்ற தகுதி கிடைத்தது எப்படி என்பதுதான் இன்றைய பூதாகர சர்ச்சையே.

இன்னும் தொடங்கப்படாத ஜியோ பல்கலைக்கழகத்துக்கு உலகத் தர பல்கலை என்ற அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் உயர்கல்வித் துறை விளக்கம் அளித்துள்ளது.

இது குறித்து மத்திய உயர்கல்வித் துறையின் செயலர் ஆர். சுப்ரமணியம் ஏஎன்ஐக்கு அளித்த பதிலில், க்ரீன்ஃபீல்ட் பிரைவேட் இன்ஸ்டிடியூஷன் என்ற பிரிவின் கீழ் ஜியோ இன்ஸ்டிடியூட்டுக்கு முன்குறிப்பிட்ட உலகத் தர பல்கலைக்கழகம் என்ற தகுதி வழங்கப்பட்டுள்ளது என்றார்.

Advertisement

அதாவது உலகத் தரம் என்ற அந்தஸ்தை வழங்க 3 பிரிவுகள் உள்ளன. முதல் பிரிவு அரசு கல்வி நிறுவனங்கள், அதில்தான் ஐஐஎஸ்சி, ஐஐடி போன்றவையும், தனியார் கல்வி நிறுவனங்கள் பிரிவில் பிட்ஸ் பிலானி, மணிப்பால் பல்கலைக்கழகமும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. 

அதில் மூன்றாவதாக இருக்கும் க்ரீன்ஃபீல்ட் பிரைவேட் இன்ஸ்டிடியூஷன்ஸ் என்ற பிரிவின் கீழ்தான் ஜியோ பல்கலைக்கழகத்துக்கு உலகத் தரம் என்ற அந்தஸ்து வழங்கப்படுகிறது. இந்த பிரிவில் இருக்கும் பல்கலைக்கழகங்கள் இதுவரை ஏற்படுத்தப்படாதவையாகவும், ஆனால் உயர் கொள்கையுடன் பொறுப்புள்ள தனிநபர் முதலீட்டாளர் நாட்டின் கல்வித் தரத்தை உலகத் தரத்துக்கு உயர்த்த வேண்டும் என்ற கொள்கையோடு வரும் போது அதனை மத்திய அரசு வரவேற்கும் வகையில் இந்த பிரிவு ஏற்படுத்தப்பட்டது.

இந்த பிரிவின் கீழ் 11 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றன. அனைத்து விண்ணப்பங்களையும் பரிசீலித்ததில், ஜியோ பல்கலைக்கழகத்துக்கு மட்டுமே அந்த தகுதி  இருந்தது தெரிய வந்தது.

விண்ணப்பத்தில் கூறப்பட்டிருக்கும் அனைத்து விவரங்களையும் ஆராயும் உயர்மட்டக் குழுவினர், அதில் கூறப்பட்டிருக்கும் தகவல்களையும், பல்கலைக்கழகத்துக்குத் தேவையான நிலத்தை கையகப்படுத்தும் திறன், கட்டமைக்கும் மற்றும் உருவாக்கும் குழுவில் இருக்கும் உறுப்பினர்கள் என அனைத்தையும் பரிசீலித்து, ஜியோ பல்கலைக்கு மட்டுமே அந்த தகுதி இருப்பதாக முடிவெடுத்து தேர்வு செய்தனர். அவர்களது தேர்வுக்கு மத்திய அரசு மரியாதை கொடுத்துள்ளது என்றார் சுப்ரமணியம்.

இதன் மூலம் ஜியோ பல்கலைக்கழகத்துக்கு முன்குறிப்பிட்ட உலகத் தர பல்கலைக்கழகம் என்ற அந்தஸ்துக்கான கடிதம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இந்த கடிதம் பெற்ற பல்கலைக்கழகம், அடுத்த 3 ஆண்டுகளுக்குள் பல்கலைக்கழகத்தை கட்டி முடித்து பணியை துவக்க வேண்டும். அவ்வாறு கட்டி முடிக்கப்பட்டால், அப்போது அந்த பல்கலைக்கழகத்துக்கு உலகத் தரப் பல்கலைக்கழகம் என்ற அந்துஸ்து கிடைக்கும். தற்போது அந்த பல்கலைக்கழகத்துக்கு அந்த அந்தஸ்து கிடையாது. அது வெறும் முன்குறிப்பிட்ட கடிதம் என்ற நிலையிலேயே இருக்கும்.

மத்திய அரசிடம் இருந்து மானியமாக இந்த பல்கலைக்கழகத்துக்கு ரூ.1000 கோடி கிடைக்கும் என்ற தகவலையும் சுப்ரமணியம் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.  
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.