கின்னஸில் இடம்பிடித்த விரல் நகம்: 66 ஆண்டுகளுக்குப் பின் வெட்டி மியூசியத்துக்குக் கொடுத்த இந்தியர்
புனேவைச் சேர்ந்த ஸ்ரீதர் சில்லால், தனது நீண்ட கை விரல் நகத்துக்காக கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்தவர். சுமார் 66 ஆண்டுகளுக்குப் பிறகு தனது மிகப்பெரிய சொத்தை பிரிந்துள்ளார்.
மும்பை: புனேவைச் சேர்ந்த ஸ்ரீதர் சில்லால், தனது நீண்ட கை விரல் நகத்துக்காக கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்தவர். சுமார் 66 ஆண்டுகளுக்குப் பிறகு தனது மிகப்பெரிய சொத்தை பிரிந்துள்ளார்.
அவர் தனது கை விரல் நகத்தை சுமார் 66 ஆண்டுகளுக்குப் பிறகு வெட்டி அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகத்துக்குக் கொடுத்துள்ளார்.
1938ம் ஆண்டு பிறந்த சில்லால், 1952ம் ஆண்டு முதல் தனது இடது கையில் நகங்களை வளர்க்கத் தொடங்கினார். சுமார் 64 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது கை விரல் நகங்கள் 909.6 செ.மீ. (9.1 மீட்டர்) நீளத்துக்கு வளர்ந்தது.
Advertisement
இதனால், ஸ்ரீதர் சில்லாலின் பெயர் உலக சாதனைப் புத்தகமான கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்தது. 2016ம் ஆண்டில், ஒரே கையில் நீண்ட விரல் நகங்களைக் கொண்டவர் என்ற அடிப்படையில் இவரது பெயர் இடம்பிடித்தது. சில்லாலின் நீண்ட விரலின் நகம் மட்டும் 197.8 செ.மீ. நீளம் இருந்தது.
கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்தாலும் இவரது வாழ்க்கையில் நீண்ட நகம் என்பது சற்று சிரமமானதாகவே இருந்தது. பல ஆண்டுகாலமாக வளர்ந்த நகங்களால், அவரது இயல்பு வாழ்க்கையில் பல கஷ்டங்களை அவர் சந்தித்தார். வேலை கிடைப்பது முதல் மனைவி கிடைப்பது வரை அனைத்துமே சிக்கலானது.
அது தவிர, தனது அன்றாடப் பணிகளை செய்து கொள்வதிலும் அவருக்கு சிரமம் ஏற்பட்டது. ஆனால் தற்போது அந்த சிரமங்கள் எல்லாம் கடந்து போய்விட்டன.
ஆம், அவரது நகத்தைப் பராமரிக்க ஒப்புக் கொண்ட டைம்ஸ் ஸ்கொயர் அருங்காட்சியம், நகத்தை வெட்டும் ஒரு நிகழ்ச்சியையே விமரிசையாக நடத்தியுள்ளது.
நேற்று நடந்த நிகழ்ச்சியில், ஸ்ரீதரின் கைவிரல் நகங்கள் பத்திரமாக நறுக்கப்பட்டு, அருங்காட்சியகத்தில் பத்திரப்படுத்தப்பட்டது.