புது தில்லி: காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியை விமர்சித்த தனது கட்சித் தலைவரை பதவி நீக்கம் செய்து பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி நடவடிக்கை எடுத்துள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் ஜெயப்ரகாஷ் சிங். சமீபத்தில் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இவர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் பதவிக்குத் தகுதியானவர் இல்லை என்று விமர்சித்திருந்தார்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியை விமர்சித்த ஜெய் பிரகாஷ் சிங்கை பதவி நீக்கம் செய்து பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதுதொடர்பாக தில்லியில் செவ்வாயன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரான ஜெயப்ரகாஷ் சிங், கட்சியின் கொள்கைகளுக்கு விரோதமாக, எதிர்கட்சித் தலைவர்கள் குறித்த தனி நபர் தாக்குதலில் பேசியது பற்றித் தகவல் அறிந்தேன். அது அவரது தனிப்பட்ட கருத்து. எனவே அவர் உடனடியாக கட்சிப் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
நமது கட்சி உறுப்பினர்கள் இனி கட்சிக் கொள்கைகள் குறித்தும் நமது மகத்தான தலைவர்கள் குறித்து மட்டுமே பேசுவது நல்லது. அதேபோல கட்சியின் தேர்தல் கூட்டணிகள் குறித்து தலைமையே முடிவெடுக்கும். இதைப் பற்றியும் எதுவும் கருத்துக்கள் கூறுவதனைத் தவிர்க்கலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.