புது தில்லி: கருத்தொற்றுமையின் பேரில் நடைபெறும் ஓரினச்சேர்க்கையை குற்றமாகக் கருதும் 377-ஆவது பிரிவை ரத்து செய்யக் கோரும் மனுக்கள் மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
கருத்தொற்றுமையின் பேரில் நடைபெறும் ஓரினச்சேர்க்கையை குற்றமாகக் கருதும் 377-ஆவது சட்டப் பிரிவை நீக்கக் கோரும் மனுக்கள் மீது, உச்ச நீதிமன்றத்தில் கடந்த சில நாள்களாக விசாரணை நடைபெற்று வருகிறது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ஆர்.எஃப்.நாரிமன், ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் மற்றும் இந்து மல்ஹோத்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இந்த வழக்கு கடந்த வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு எதிராக காட்டப்படும் பாகுபாடு களையப்பட வேண்டும் என்ற சிந்தனை இந்திய சமூகத்தில் கடந்த சில ஆண்டுகளாக வளர்ந்து வருகிறது என்றும், பாகுபாடு காரணமாக ஓரினச்சேர்க்கையாளர்கள் மன ரீதியாகப் பாதிக்கப்படுகின்றனர் என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் மனேகா குருசாமியிடம், ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு பிறரைப் போன்ற உரிமைகள் கிடைப்பதைத் தடுக்கும் வகையில் ஏதேனும் சட்டம், ஒழுங்குமுறை விதிகள், சட்டப்பிரிவுகள் அல்லது விதிமுறைகள் ஏதேனும் உள்ளதா?'' என்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா கேள்வி எழுப்பினார். அதற்கு, அந்த வழக்குரைஞர் இல்லை என்று பதில் அளித்தார்.
மூத்த வழக்குரைஞர் சி.யு.சிங் வாதிடுகையில், 377-ஆவது சட்டப்பிரிவை நீக்குவதால் மட்டுமே, ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு எதிரான சமூகப் பாகுபாடு நீங்கி விடும் எனக் கூறி விட முடியாது'' என்று தெரிவித்தார். அப்போது, பாலியல் விருப்பத்தின் அடிப்படையில் இந்த நபர்களுக்கு எதிராக பாகுபாடு காட்டக் கூடாது என்பது உண்மைதான் என நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
இந்நிலையில் ஓரினச்சேர்க்கையை குற்றமாகக் கருதும் 377-ஆவது பிரிவை ரத்து செய்யக் கோரும் மனுக்கள் மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
இதுதொடர்பான மனுக்கள் செவ்வாயன்று விசாரணையாக்கு வந்த பொழுது நீதிபதிகள் அமர்வு தீர்ப்பை ஒத்தி வைக்கும் அறிவிப்பினை வெளியிட்டது.