மகாராஷ்டிர மாநிலத்தின் பைகுல்லா மகளிர் சிறையில் உள்ள 81 கைதிகளுக்கு வாந்தி, வயிற்றுப் போக்கு ஏற்பட்டதையடுத்து, மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளனர். விஷம் கலந்த உணவை அவர்கள் சாப்பிட்டிருக்கலாம் என்று கைதிகளுக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் கூறினர்.
சிறையில் கைதிகள் வாந்தி, வயிற்றுப்போக்கு என சிறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்ததையடுத்து, வெள்ளிக்கிழமை காலை ஜெ.ஜெ மருத்துவமனையில் கைதிகளை அனுமதித்தனர்.
இதுகுறித்து மருத்துவமனையின் தலைமை மருத்துவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
வெள்ளிக்கிழமை மதியம் வரை 81 கைதிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 4 மாத குழந்தை ஒன்றும், 24 வார கர்ப்பிணிகள் 2 பேரும் உள்ளனர். அனைவரும் நலமாக உள்ளனர். அடுத்த 48 மணி நேரத்திற்கு அவர்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார். உணவு ஒவ்வாமைதான் காரணமா? என செய்தியாளர்கள் கேட்டதற்கு, இது குறித்த ஆய்வு நடந்து கொண்டிருக்கிறது. அதற்குள் முடிவுக்கு வர முடியாது என்று கூறினார்.
ஷீனா போரா கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்ட இந்திராணி முகர்ஜியும் பைகுல்லா சிறையில்தான் அடைக்கப்பட்டுள்ளார். எனினும், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை. சிறையில் நலமாக இருக்கிறார் என்று சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சிறை அதிகாரிகள் அடித்ததில் கைதி இறந்த சம்பவத்தால் பைகுல்லா சிறை, கடந்த ஆண்டு தலைப்பு செய்திகளில் இடம் பெற்றது.
கடந்த ஜூன் 23-ல் மஞ்சு செட்டி(45) என்ற கைதி ஜெ ஜெ மருத்துவமனையில் இறந்தததையடுத்து சிறையில் 200 கைதிகள் போராட்டம் நடத்தினர். இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து சிறை அதிகாரிகள் 6 பேரை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.