மக்களவையில் பிரதமர் மோடியின் ஆணவப் பேச்சு: சந்திரபாபு நாயுடு ஆவேசம்
மத்திய அரசுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் மீது பிரதமர் மோடியின் பேச்சு ஆணவத்துடன் இருந்ததாக ஆந்திர முதல் சந்திரபாபு நாயுடு ஆவேசத்துடன் கூறியுள்ளார்.
அமராவதி: மத்திய அரசுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் மீது பிரதமர் மோடியின் பேச்சு ஆணவத்துடன் இருந்ததாக ஆந்திர முதல் சந்திரபாபு நாயுடு ஆவேசத்துடன் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் போதிய உறுப்பினர்களின் எண்ணிக்கை இருந்ததால், மக்களவையில் நேற்று பிரதமர் மோடி அவ்வாறு பேசியதாகவும் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் என்பது பெரும்பான்மைக்கும், நன்மைக்கும் நடந்த போர். அதில் பெரும்பான்மையே வெற்றி பெற்றுள்ளது.
Advertisement
ஆந்திராவைச் சேர்ந்த 5 கோடி மக்களுக்கும் பிரதமர் மோடியின் பேச்சு ஏமாற்றமளிக்கிறது. தகுதியில்லாத ஒருவர் பிரதமர் பதவியை வகிப்பதால் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றன.
தங்களுக்கு அளிக்கப்பட்ட உறுதிமொழியை நிறைவேற்றாதது குறித்து பிரதமர் குறிப்பிடுவார் என்றும், தனது தவறை திருத்துக் கொள்வார் என்றும் மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது என்று தெரிவித்துள்ளார்.
முதல் முறையாக மாநிலக் கட்சி ஒன்று மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து, அதற்கு ஏராளமான கட்சிகள் ஆதரவு அளித்தன. ஆதரவு அளித்த கட்சிகளுக்கு நன்றி தெரிவிக்க, இன்று தில்லி செல்லும் சந்திரபாபு நாயுடு, ஆந்திர மாநிலம் எவ்வாறு ஏமாற்றப்பட்டது என்பதை நாட்டு மக்களுக்கு சொல்லியே ஆக வேண்டும் என்றும் கூறினார்.