ராஜஸ்தான் மாநிலம், அல்வர் மாவட்டத்தில் பசுக்களை கடத்திச் சென்றதாகக் கூறி இளைஞரை மர்ம கும்பல் அடித்துக் கொலை செய்தது.
இதுகுறித்து காவல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
அக்பர் கான் (28) என்பவர் 2 மாடுகளை வாகனத்தில் ஏற்றிக் கொண்டு ஹரியாணாவில் உள்ள தனது சொந்த கிராமத்துக்கு வெள்ளிக்கிழமை இரவு அல்வர் மாவட்டம் வழியாக சென்றுகொண்டிருந்தார்.
அப்போது, அவரை ஒரு கும்பல் இடைமறித்து தாக்கியது. இதைக் கண்டதும் அவருடன் இருந்த மற்றொரு நபர் தப்பியோடிவிட்டார். அவர் பசுக்களை கடத்திச் சென்றதாக சந்தேகித்து தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்று கருதுகிறோம். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து, மர்ம கும்பலை தேடி வருகிறோம் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
முன்னதாக, அல்வர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் 3-ஆம் தேதி இதேபோன்று ஒருவர் மர்ம கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டார். அவரும் பசுக்களை வாகனத்தில் ஹரியாணாவுக்கு எடுத்துச் சென்றுகொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
அல்வர் மாவட்டத்தில் இதுபோன்ற தாக்குதல் சம்பவங்கள் அவ்வப்போது நடைபெறுவதாக கூறப்படுகிறது.
பசுப் பாதுகாவலர்கள் என்ற பெயரில் சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு செயல்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
காவல் துறை சிறப்பு அதிகாரியை நியமித்து பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் படுகொலைகள் நிகழாததை உறுதி செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உத்தரவிட்டிருந்தது.