ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: ப.சிதம்பரத்தை கைது செய்வதற்கு தடை நீட்டிப்பு
ஏர்செல்-மேக்சிஸ் கருப்புப் பண முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை வரும் ஜூலை 10-ஆம் தேதி வரை கைது செய்ய தில்லி சிறப்பு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
ஏர்செல்-மேக்சிஸ் கருப்புப் பண முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை வரும் ஜூலை 10-ஆம் தேதி வரை கைது செய்ய தில்லி சிறப்பு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இந்த வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்கக் கோரி ப.சிதம்பரம் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு குறித்து பதிலளிக்க கூடுதல் அவகாசம் வேண்டும் என்று அமலாக்கத்துறை சார்பில் கோரப்பட்டது. இதையடுத்து, அவரை கைது செய்வதற்கான தடையை ஜூலை 10-ஆம் தேதி வரை நீதிமன்றம் நீட்டித்தது.
இந்த வழக்கில் ப.சிதம்பரம் சார்பில் மூத்த வழக்குரைஞர் அபிஷேக் மனு சிங்வி, வழக்குரைஞர் பி.கே.தூபே ஆகியோர் ஆஜராகினர். அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் சோனியா மாதூர், வழக்குரைஞர் நிதீஷ் ராணா ஆகியோர், இந்த மனு தொடர்பாக விரிவான பதிலளிக்க 4 வாரகால அவகாசம் வேண்டும் என்று கோரினர்.
சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு விசாரணைக்கு வரும் ஜூலை 10-ஆம் தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்ற சிதம்பரம் தரப்பு வழக்குரைஞர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், அது வரை அவரைக் கைது செய்யக் கூடாது என்று உத்தரவு பிறப்பித்தனர்.
மற்றொரு வழக்கு: இந்த வழக்கில் மட்டுமல்லாது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம், வெளிநாட்டு முதலீடு பெறுவதில் நிகழ்ந்த முறைகேடு தொடர்பான வழக்கிலும் சிதம்பரத்தை சிபிஐ கைது செய்வதற்கு ஜூலை 3-ஆம் தேதி வரை தடை விதித்து தில்லி உயர் நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. ரூ.3,500 கோடி ஏர்செல்-மேக்சிஸ் அன்னிய முதலீட்டிலும், ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரத்தில் ரூ.305 கோடி அளவிலும் முறைகேடு நடைபெற்றிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் முதலாவது ஆட்சிக் காலத்தில் ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோது, மேற்கண்ட இரு வர்த்தக நடவடிக்கைகளிலும் வெளிநாட்டு முதலீடுகளை அனுமதிப்பதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.