அரசு முறைப் பயணமாக, இத்தாலி சென்றுள்ள வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், அந்நாட்டுப் பிரதமர் ஜிùஸப்பே கான்டேவை திங்கள்கிழமை சந்தித்துப் பேசினார். அப்போது, இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.
அரசு முறைப் பயணமாக, இத்தாலி, பிரான்ஸ், லக்ஸம்பர்க், பெல்ஜியம் ஆகிய ஐரோப்பிய நாடுகளுக்கு சுஷ்மா ஸ்வராஜ் ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டுச் சென்றார். முதல் கட்டமாக, இத்தாலி சென்ற அவர், தலைநகர் ரோமில் பிரதமர் ஜிùஸப்பே கான்டேவை திங்கள்கிழமை சந்தித்துப் பேசினார்.
அப்போது, இத்தாலியின் புதிய பிரதமராக அண்மையில் பதவியேற்றுள்ள கான்டேவுக்கு சுஷ்மா ஸ்வராஜ் வாழ்த்து தெரிவித்தார். அதைத் தொடர்ந்து, பல்வேறு துறைகளில் இந்தியா, இத்தாலி இடையே இரு தரப்பு ஒத்துழைப்பு வலுப்படுத்துவது குறித்தும், அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பது குறித்தும் இருவரும் விவாதித்தனர்.
பேச்சுவார்த்தையின் முடிவில், பயங்கரவாதத்தை ஒடுக்குவதிலும், இணைய வழி பாதுகாப்பை வலுப்படுத்துவதிலும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.
ஜிùஸப்பே கான்டே, இத்தாலி பிரதமரான பிறகு, இத்தாலி, இந்தியா இடையே நடைபெறும் முதல் அரசியல் தலைவர்கள் சந்திப்பு இதுவாகும். அதைத் தொடர்ந்து, இத்தாலி வெளியுறவுத் துறை அமைச்சர் என்úஸா மோவெரோ மிலானேஸியையும் சுஷ்மா ஸ்வராஜ் சந்தித்துப் பேசினார். அப்போது, இரு நாட்டு விவகாரங்கள் குறித்தும், சர்வதேச விவகாரங்கள் குறித்தும் இருவரும் தங்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.
இந்தத் தகவல்களை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் தனது சுட்டுரைப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இத்தாலி பயணத்தை முடித்துக் கொண்டு பிரான்ஸ் செல்லும் சுஷ்மா ஸ்வராஜ், பின்னர், லக்ஸம்பர்க், பெல்ஜியம் நாடுகளுக்குச் செல்லவுள்ளார்.