ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவரும், பிகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத்துக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ராஞ்சி உயர் நீதிமன்றம் ஆகஸ்ட் 17-ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது.
முன்னதாக, லாலுவின் உடல் நிலை மற்றும் பெற வேண்டிய மருத்துவச் சிகிச்சைகளின் அடிப்படையில் அவருக்கு கடந்த மே 11-ஆம் தேதி, ஒன்றரை மாதம் ஜாமீன் அளிக்கப்பட்டது. இந்த ஜாமீன் கடந்த 27-ஆம் தேதி நிறைவடைய இருந்ததை அடுத்து, ஜாமீன் நீட்டிப்பு கோரி அவர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை கடந்த 22-ஆம் தேதி விசாரித்த நீதிபதி, ஜூலை 3-ஆம் தேதி வரை லாலுவின் ஜாமீனை நீட்டித்தார். மேலும், இந்த வழக்கை 29-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
அதன்படி, இந்த வழக்கு இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வந்தது. அப்போது லாலு பிரசாத்தின் வழக்கறிஞர் பிரபாத் குமார் லாலு பிரசாத்தின் ஜாமீனை மேலும் நீட்டிக்கும்படி புதிய மனுவை தாக்கல் செய்தார். இதையடுத்து, லாலு பிரசாத்தின் ஜாமீனை மேலும் 3 வார காலம் நீட்டித்து ராஞ்சி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதாவது, அவருக்கு தற்போது ஆகஸ்ட் 17-ஆம் தேதி வரை ஜாமீன் நீட்டிக்கப்பட்டுள்ளது.
வழக்கு விவரம்:
பல கோடி ரூபாய் மாட்டுத் தீவன ஊழல் தொடர்பான 3 வழக்குகளில் லாலு குற்றவாளி என்று நீதிமன்றம் உறுதி செய்தது. இதையடுத்து, அவர் கடந்த டிசம்பர் 23-ஆம் தேதி முதல் ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையடுத்து, தான் சிறப்பு சிகிச்சை பெற 3 மாத காலம் ஜாமீன் வழங்க வேண்டும் என்று ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் லாலு சார்பில் கடந்த மாதம் மனு தாக்கல் செய்யப்பட்டது. எனினும் அவருக்கு ஒன்றரை மாதம் மட்டுமே ஜாமீன் கிடைத்தது.