முகப்பு
இந்தியா

சுவிஸ் வங்கியில் உள்ள இந்தியர்களின் பண விவரம் விரைவில் பெறப்படும்: நிதியமைச்சர் பியூஷ் கோயல்

சுவிஸ் வங்கியில் உள்ள இந்தியர்களின் பண விவரம் விரைவில் பெறப்படும் என மத்திய நிதியமைச்சர் பியூஷ் கோயல், வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

Updated On : 29 ஜூன், 2018 at 6:02 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:35 PM

சுவிஸ் வங்கியில் உள்ள இந்தியர்களின் பண விவரம் விரைவில் பெறப்படும் என மத்திய நிதியமைச்சர் பியூஷ் கோயல், வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது:

சுவிஸ் வங்கியில் உள்ள இந்தியர்களின் முதலீடு மற்றும் கறுப்புப் பணம் தொடர்பான அனைத்து விவரங்களும் பெறுவது தொடர்பாக இந்தியா, சுவிட்சர்லாந்து இடையே ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே இதன் அடிப்படையில் பிப்ரவரி 1, 2018 முதல் வரும் அடுத்த நிதியாண்டில் இதுதொடர்பான அனைத்து விவரங்களும் தெரியவரும். 

Advertisement

2017-ஆம் ஆண்டில் சுவிஸ் வங்கியில் தனிநபர் வைப்புக் கணக்குகளில் இந்தியர்களின் முதலீடு 50 சதவீதம் அதிகரித்து ரூ.7 ஆயிரம் கோடி வரை முதலீடு செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்தும் கறுப்புப் பணம் அல்லது முறையற்ற பரிவர்த்தனை என்பதை இப்போதே எவ்வாறு யூகிக்க முடியும். 

மேலும் சுவிஸ் வங்கியில் உள்ள மொத்த முதலீடுகளில் 40 சதவீதம் அப்போதைய மத்திய நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் கொண்டு வந்த தாராளமயமாக்கல் கொள்கை முடிவுக்கு பின்னர் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதில் வெளிநாடு வாழ் இந்தியர் (என்.ஆர்.ஐ.) உட்பட தனிநபரின் வங்கிக் கணக்குகளில் 2.5 லட்சம் அமெரிக்க டாலர்கள் வரை முதலீடு செய்ய எவ்வாறு அனுமதித்தார்கள் என்பதும் தெரியவில்லை.

இதுதொடர்பாக சுவிஸ் வங்கியிடம் இருந்து பெறப்படும் தகவல்களின் அடிப்படையில், தவறு செய்தவர்கள் கண்டெடுக்கப்பட்டால் அவர்களுக்கு நிச்சயம் கடுமையான தண்டனை வழங்கப்படும். 

அதுபோல சமீபத்தில் அமெரிக்கா டாலருக்கு நிகராண இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவை சந்தித்துள்ளதாக செய்திகள் வெளியாகின. இதில் சர்வதேச அளவிலான பொருளாதார நிலைகளின் அடிப்படையில் சில சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

மேலும் கடந்த 5 ஆண்டுகளில் இந்திய ரூபாயின் மதிப்பு மோசமான சரிவை சந்திக்கவில்லை. கடந்த 2013-ஆம் ஆண்டு அப்போதைய மத்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்த ரகுராம் ராஜன், இந்திய பொருளாதாரத்தில் ஏற்படுத்திய தாராளமயமாக்கல் நடவடிக்கைகளால் ரூபாயின் மதிப்பு பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் உலக வங்கியிடம் இருந்து 32 பில்லியன் டாலர்கள் கடன் பெறப்பட்டுள்ளது. இந்த கடனும் தற்போது அடைக்கப்பட்டுள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.