முகப்பு
இந்தியா

மக்களாட்சியே அரசமைப்புச் சட்டத்தின் நோக்கம்: உச்ச நீதிமன்ற நீதிபதி ஆதர்ஷ் குமார் கோயல்

அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்கியதன் நோக்கம் மக்களாட்சி நடைபெற வேண்டும் என்பதற்காகத்தான் என்று உச்ச நீதிமன்ற நீதிபதி ஆதர்ஷ் குமார் கோயல் கூறினார்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:22 PM
பகிர்:

அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்கியதன் நோக்கம் மக்களாட்சி நடைபெற வேண்டும் என்பதற்காகத்தான் என்று உச்ச நீதிமன்ற நீதிபதி ஆதர்ஷ் குமார் கோயல் கூறினார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் சென்னை வழக்குரைஞர் சங்கம் (எம்பிஏ) மற்றும் தமிழ்நாடு மூத்த வழக்குரைஞர் கூட்டமைப்பு சார்பில், இலவச சட்ட ஆலோசனை வழங்குவதற்காக நீதிக்கரங்கள் என்ற அமைப்பின் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. நீதிக்கரங்கள் அமைப்பின் அடையாள வில்லையைத் திறந்து வைத்து உச்ச நீதிமன்ற நீதிபதி ஆதர்ஷ் குமார் கோயல், 'டாக்டர் அம்பேத்கர் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியதன் நோக்கம் மக்களாட்சி நடைபெற வேண்டும் என்பகற்காகத்தான். ஜனநாயக வழியில் மக்களாட்சி முறை இருந்தால் மட்டுமே அரசியலமைப்புச் சட்டமும் அதன் மீதான நம்பிக்கையும் வலுப்பெறும். அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் சொல்லப்பட்டுள்ள சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் இல்லை எனில் சமூகநீதி இல்லாமல் போய்விடும். ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த நீதிக்கரங்கள் அமைப்பு அரசியலமைப்பின் மீது கூடுதல் நம்பிக்கையை ஏற்படுத்தும்' என்றார்.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி, 'மூத்த வழக்குரைஞர்களால் நாட்டிலேயே முதல்முறையாக ஏழை எளியவர்களுக்கு நீதி கிடைக்க நீதிக்கரங்கள் அமைப்பு உருவாக்கப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது. வழக்குரைஞர்கள் மத்தியில் சட்டப்பணிகள் ஆணைக்குழு என்றாலே விருப்பமில்லாத நிலை தான் இருந்து வருகிறது. இந்த நிலையை இந்த அமைப்பின் முயற்சிகள் மாற்றும் என நம்புகிறேன். அனைத்து வழக்குரைஞர்களும் சமுதாயப் பணியாற்ற முன் வர வேண்டும். இந்த அமைப்புக்கு உயர்நீதிமன்றம் முழு ஒத்துழைப்பு வழங்கும்' என்றார்.
உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், எம்.எம்.சுந்தரேஷ், அரசு தலைமை வழக்குரைஞர் விஜய் நாராயண், மூத்த வழக்குரைஞர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பி.எஸ்.ராமன், எம்பிஏ சங்கத்தின் செயலாளர் வி.ஆர்.கமலநாதன் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →