பெங்களூர்: கர்நாடகாவில் மூத்த பெண் பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கொலை வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள முக்கியக் குற்றவாளியை, சிறப்புப் புலனாய்வுப் பிரிவினர் வெகு நாட்களாக கண்காணித்து வந்துள்ளனர்.
6 மாதங்களுக்கு முன்பு நடந்த கௌரி லங்கேஷ் கொலையில் நவீன் குமார் என்ற நபரை சிறப்புப் புலனாய்வு படையினர் கைது செய்துள்ளனர்.
இது குறித்து காவல்துறையினர் கூறுகையில், நவீன் குமாரை தொடர்ந்து கண்காணித்து வந்தால், நிச்சயம் இந்த கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியைப் பற்றி தெரிந்து கொள்ளலாம் என்று நம்பிக்கையோடு இருந்தோம். நவீன் குமார் தவிர, இன்னும் பலரையும் சிறப்புப் புலனாய்வுப் படையினர் வெகு தீவிரமாக கண்காணித்து வந்தோம். அதே போலத்தான் நவீனையும் கண்காணித்து, அவனது தொலைபேசி அழைப்புகளை கவனித்து வந்தோம். ஆரம்பத்தில் அவன் மீது எந்த சந்தேகமும் எழவில்லை. ஆனால், 2017 அக்டோபர் 14ம் தேதி குற்றவாளி பற்றிய உருவப் படத்தை வெளியிட்ட பிறகு, சுமார் 2 மாதங்கள் நவீன் தலைமறைவாக இருந்தார். அவரது செல்போனைப் பயன்படுத்துவதைத் தவிர்த்தார். அதனால் எங்களுக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்துதான் அவர் செல்போனைப் பயன்படுத்த ஆரம்பித்தார் என்று தெரிவித்துள்ளனர்.
மேலும், அவரது செல்போன் உரையாடல்களைக் கேட்டதில், கௌரி லங்கேஷ் கொலையைப் பற்றி ஏதோ ஒன்று அவருக்குத் தெரிந்திருக்கிறது என்பதை அறிந்து கொண்டோம். ஆனால் அவரை உடனடியாக கைது செய்யவில்லை. மேலும் ஆதாரங்கள், தகவல்களை திரட்டினோம். ஜனவரி மாதம் இறுதியில்தான், மற்றொரு கொலையை நடத்துவதற்கான சதி திட்டத்தைத் தீட்டியபோது நவீன் குமார் பற்றிய சந்தேகம் உறுதியாகத் தெரிய வந்தது. அப்போது அவரை கைது செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இல்லையென்றால், அந்த சதி திட்டத்தையும் அவர் நிறைவேற்றியிருப்பார். வேறு வழியில்லாமல் உடனடியாக அவரை கைது செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டோம் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.