புதுதில்லி: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் தேதி பாஜகவின் தொழில்நுட்பப் பிரிவின் மூலம் முன்கூட்டியே வெளியான விவகாரம் குறித்து விவசாரிக்க விசாரணைக்குழு ஒன்றை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து தலைமைத் தேர்தல் ஆணையர் ஓம் பிரகாஷ் ராவத் புது தில்லியில் இன்று அறிவித்தார். சுமார் 11 மணியளவில் புது தில்லியில் செய்தியாளர்களை சந்தித்த ஓம் பிரகாஷ் ராவத், தேர்தல் குறித்து விரிவான தகவல்களை பகிர்ந்து கொண்டார். ஆனால், கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் தேதி குறித்து 11.30 மணியளவில்தான் அறிவித்தார்.
அதே சமயத்தில் 11 மணியளவிலேயே, பாஜகவின் தொழில்நுட்பப் பிரிவைச் சேர்ந்த அமித் மால்வியா தனது டிவிட்டர் பக்கத்தில் கர்நாடகா தேர்தல் தேதி மே 12ம் தேதி என்பதை பதிவு செய்திருந்தார்.
இந்த டிவிட்டரைப் பார்த்த ஒரு சில ஊடகங்களும் அந்த செய்தியை ஒளிபரப்பின. இது மிகப்பெரிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.இது குறித்து அமித் மால்வியாவின் டிவிட்டரை பலரும் பகிர்ந்திருந்தனர். உடனடியாக தனது பதிவை நீக்கிய அமித் மால்வியா, ஆங்கில ஊடகத்தில் வெளியான தகவலைதான் தான் பகிர்ந்ததாக டிவிட்டரில் விளக்கம் அளித்திருந்தார்.
எனினும், இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்களும், விமரிசனங்களும் எழுந்துள்ளன.இது குறித்து தேர்தல் ஆணையர் ஓம் பிரகாஷ் ராவத்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், தேர்தல் தேதி முன்கூட்டியே வெளியானது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்று விளக்கம் அளித்தார்.
அதன்படி இந்த விவகாரம் குறித்து விசாரிக்க விசாரணைக்குழு ஒன்றை தேர்தல் ஆணையம் தற்பொழுது அறிவித்துள்ளது. ஒரு வாரத்திற்குள் இந்த குழுவானது விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலாவதாக அமித் மால்வியாவிடம் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று தெரிகிறது.