முகப்பு
இந்தியா

என்னை வெறுப்பவர்களை என்னால் வெறுக்க முடியாது: ராகுல்

தன்னை வெறுப்பதையே தொழிலாகக் கொண்டவர்களை தன்னால் வெறுக்க முடியாது என காங்கிரஸ் தலைவர் ராகுல் ட்வீட் செய்துள்ளார்.

Updated On : 28 மார்ச், 2018 at 4:03 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:05 PM

கர்நாடக மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவதையெட்டி அங்கு ஆளும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல், தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். மேலும் சமீபத்தில் ஃபேஸ்புக் பக்கத்தில் உள்ள தனிநபர் விவரங்கள் திருடப்பட்டு விற்கப்பட்ட விவகாரத்தில் அதன் நிறுவனர் மார்க் பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளார். இதில், இந்திய தேர்தலுக்காக சில தனியார் உளவு அமைப்புகள் இதனை வாங்கி தங்கள் லாபத்துக்காக பயன்படுத்தியதாக காங்கிரஸ், பாஜக பரஸ்பர குற்றச்சாட்டை முன்வைக்கின்றன. இவ்விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் பாஜக-வை கடுமையாக விமரிசித்துள்ளார். இருப்பினும், தன்னை வெறுப்பவர்களை தன்னால் வெறுக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ராகுல் கூறியதாவது:

எனக்கு எதிராக வெறுப்புணர்வை தூண்டுபவர்களை என்னால் வெறுக்க முடியாது. இதற்காக அவர்கள் பலதரப்பட்ட கட்டுக்கதைகளையும், காழ்ப்புணர்வையும் பயன்படுத்தி வருகின்றனர். ஏனென்றால் அவர்களுக்கு அதுதான் பிரதான தொழில். வெறுப்புக்கும் ஒரு விலையுண்டு. கோப்ரா போஸ்ட் கூறியது போன்று என் மீதான வெறுப்பினை வியாபாரப்படுத்துவதால் அவர்களின் வாழ்வாதாரம் வளர்கிறது என்றால் நான் உண்மையிலேயே ஆசிர்வதிக்கப்பட்டவன். இதனால் நான் பெருமையடைகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, சுமார் 17 ஊடகங்கள் சமூகப் பிரிவினை தொடர்பான செய்திகளை வெளியிட ஒரு குறிப்பிட்ட தொகையை பெற்றதாகவும், ராகுல் மற்றும் இதர சில அரசியல் தலைவர்கள் மீது வெறுப்பினை ஏற்படுத்தும் விதமாக செய்திகளை வெளியிட சம்மதித்ததாகவும் கோப்ரா போஸ்ட் எனும் செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் நடத்திய ரகசிய ஆய்வில் கண்டுபிடித்ததாக கூறப்பட்டுள்ளது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.