கர்நாடகத்துக்கு காவிரி மேலாண்மை வாரியம் வேண்டாம்
கர்நாடகத்துக்கு காவிரி மேலாண்மை வாரியம் வேண்டாம் என அம்மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
கர்நாடகத்துக்கு காவிரி மேலாண்மை வாரியம் வேண்டாம் என அம்மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மைசூரில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:
காவிரி ஆற்றுநீர்ப் பங்கீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த இறுதித் தீர்ப்பு குறித்து விவாதிப்பதற்காக நடத்தப்பட்ட அனைத்துக் கட்சி எம்.பி.க்களின் கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பா, எதிர்க்கட்சித் தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர், மாநில மஜத தலைவர் குமாரசாமி, முன்னாள் பிரதமர் எச்.டி.தேவெ கெளடா ஆகியோர் கலந்து கொள்ளவில்லை.
ஆனால், பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் அனந்த்குமார், சதானந்த கெளடா மட்டுமே கலந்து கொண்டனர். காவிரி விவகாரத்தில் கர்நாடகத்தின் நிலைப்பாடு என்னவாக இருக்க வேண்டும் என்பது குறித்து மத்திய அமைச்சர்கள் அனந்த்குமார், சதானந்த கெளடாவிடம் விளக்கியிருக்கிறேன்.உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்குமாறு ஆணையிடவில்லை. மாறாக, தனது தீர்ப்பை அமல்படுத்த செயல்திட்டம் (ஸ்கீம்) அமைக்கும்படி உத்தரவிட்டுள்ளது. காவிரி ஆற்றுநீரை சம்பந்தப்பட்ட மாநிலங்கள் பகிர்ந்து கொள்வதற்கான நடைமுறைகளை வகுப்பதே செயல் திட்டமாகும்.
கர்நாடக நலனுக்கு எதிராக காவிரி மேலாண்மை வாரியம் அமைந்தால், அதற்கு மத்திய அரசை ஆளும் பாஜகதான் பொறுப்பேற்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்குமாறு தமிழக அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரம் செய்து வருகின்றன.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை கடுமையாக எதிர்க்குமாறு அண்மையில் நடைபெற்ற கர்நாடக அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் அனந்த்குமார், சதானந்த கெளடாவை கேட்டுக் கொண்டேன் என்றார் அவர்.