கிரிமினல் குற்றச்சாட்டு உள்ள ஐபிஎஸ் அதிகாரிகள் பட்டியலை தயாரிக்க சிஐசி உத்தரவு
கிரிமினல் குற்றசாட்டுகளில் சிக்கியுள்ள ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயர் பட்டியலைத் தயாரிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு மத்திய தகவல் ஆணையம் (சிஐசி) உத்தரவிட்டுள்ளது.
கிரிமினல் குற்றசாட்டுகளில் சிக்கியுள்ள ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயர் பட்டியலைத் தயாரிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு மத்திய தகவல் ஆணையம் (சிஐசி) உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, நாடு முழுவதும் உள்ள ஐபிஎஸ் அதிகாரிகளில் எத்தனை பேர் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகள் உள்ளன? அவர்களின் பெயர் விவரம் உள்ளிட்டவற்றை தர வேண்டும் என்று தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ் சமூக ஆர்வலர் நூதன் தாக்குர், மத்திய உள்துறை அமைச்சகத்திடம் கோரியிருந்தார்.
இதற்கு பதிலளித்த மத்திய உள்துறை அமைச்சகத்தின் காவல் துறை பிரிவு, 'கிரிமினல் வழக்குகளை எதிர்கொண்டு ஐபிஎஸ் அதிகாரிகளின் என்று எந்த விவரத்தையும் தாங்கள் வைத்துக் கொள்ளவில்லை. எனவே, உங்கள் கோரிக்கை தேசிய குற்ற ஆவணக் காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறது' என்று பதில் அளித்தது. இதையடுத்து, மத்திய தகவல் ஆணையர் யசோவர்த்தன் ஆஸாத்திடம் இது தொடர்பாக நூதன் தாக்குர் புகார் தெரிவித்தார்.
இதையடுத்து, 'தேசிய குற்ற ஆவணக் காப்பகம் என்பது தேசிய அளவில் நிகழும் குற்றங்களை ஆவணப்படுத்தும் அமைப்பாகும். அவர்களிடம் மனுதாரர் கோரும் மிகச் சிறிய வட்டத்துக்குள்ளான தகவலைத் தேடுவது சற்று கடினம். நாடு முழுவதும் சுமார் 9,000 ஐபிஎஸ் அதிகாரிகள் மட்டும் உள்ள நிலையில், அவர்கள் மீது உள்ள குற்ற வழக்குகள் தொடர்பான தகவல்களை சேகரித்துத் தருவது உள்துறை அமைச்சக அதிகாரிகளுக்கு பெரிய அளவில் சிரமத்தை ஏற்படுத்தாது.
மேலும், ஐபிஎஸ் அதிகாரிகள் மீதான ஒழுங்கு நடவடிக்கை குறித்த தகவல்களை உள்துறை அமைச்சகம் ஏற்கெனவே பராமரித்து வருகிறது. எனவே, ஐபிஎஸ் அதிகாரிகள் மீதான கிரிமினல் வழக்கு குறித்த தகவல்களை சேகரித்து பட்டியலைத் தயாரிக்க வேண்டும். தேசத்துக்காக உயர் பொறுப்பில் பணியாற்றுபவர்கள் குறித்து வெளிப்படைத்தன்மை நிலவ வேண்டும்.
அப்போதுதான் ஆட்சியின் மீதான நம்பகத்தன்மை அதிகரிக்கும்' என்று யசோவர்த்தன் ஆஸாத் மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். ஆஸாத் ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.