தமிழக எம்.பி.க்களின் போராட்டத்தால் யாரும் பதற்றமடைய வேண்டாம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் தமிழக எம்.பி.க்களின் போராட்டத்தால் கர்நாடகத்தில் யாரும் பதற்றமடைய வேண்டாம் என்று முன்னாள் பிரதமர் எச்.டி.தேவெ கெளடா தெரிவித்தார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் தமிழக எம்.பி.க்களின் போராட்டத்தால் கர்நாடகத்தில் யாரும் பதற்றமடைய வேண்டாம் என்று முன்னாள் பிரதமர் எச்.டி.தேவெ கெளடா தெரிவித்தார்.
இதுகுறித்து ஹாசனில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் சிரமம் உள்ளதாக மத்திய அரசு கருத்து தெரிவித்துள்ளது. என்றாலும், தமிழகத்தைச் சேர்ந்த நண்பர்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தீவிர போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் மாநிலங்களவை உறுப்பினர் ஒருவர் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் விடுத்துள்ளார். எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் இதுபோன்று மிரட்டல் விடுவது முறையல்ல. எந்த ஒரு பிரச்னையும் அமைதியான முறையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்.
மத்திய அரசு மீண்டும் உச்ச நீதிமன்றத்தின் கருத்தைக் கேட்பதாக தெரிவித்துள்ளனர்.
முதலில் மத்திய நீர்ப்பாசன அமைச்சரின் தலைமையில் 4 மாநில முதல்வர்களைக் கொண்டு ஒரு குழு அமைக்க வேண்டும். பிறகு, இரு மாநிலங்களின் நீர் நிலைமையை ஆராய வல்லுநர்களை நியமிக்க வேண்டும்.
5 ஆண்டுகளில் நீர்நிலைகளின் சாதக, பாதகங்களை ஆராய வேண்டும். பின்னர், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து உரிய முடிவு எடுக்க வேண்டும்.
அதற்கு முன்னதாக இந்த விவகாரத்தில் உரிய முடிவு எடுக்க வலியுறுத்தி தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறுவது முறையல்ல.
தமிழக எம்.பி.க்களின் போராட்டத்தால் கர்நாடகத்தில் யாரும் பதற்றமோ, உத்வேகமோ அடைய வேண்டாம். இந்த விவகாரம் தொடர்பாக மத்திய நீர்ப்பாசனத் துறை அமைச்சரிடம் பேசத் திட்டமிட்டுள்ளேன் என்றார் தேவெ கெளடா.