தாஜ்மஹாலை சுற்றிப் பார்க்க நேரக் கட்டுப்பாடு!: ஏப்ரல் முதல் அமல்
உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலைச் சுற்றிப் பார்க்க நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.1) முதல் சுற்றுலாப் பயணிகள் அதிகபட்சமாக
உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலைச் சுற்றிப் பார்க்க நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.1) முதல் சுற்றுலாப் பயணிகள் அதிகபட்சமாக 3 மணி நேரம் மட்டுமே தாஜ்மஹால் வளாகத்துக்குள் இருக்க முடியும். அதற்கு மேல் இருப்பவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பை இந்திய தொல்லியல் ஆய்வுத் துறை (ஏஎஸ்ஐ) வெளியிட்டுள்ளது. கூட்ட நெரிசல் நாளுக்கு நாள் அதிகமாகி வருவதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் ஆக்ரா நகரில் அமைந்துள்ள தாஜ்மஹால், முகலாயர்களின் கட்டடக் கலையைப் பறைசாற்றுவதோடு மட்டுமன்றி இந்தியாவின் அடையாளச் சின்னங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது. விடுமுறை தினங்களில் சுமார் 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தாஜ்மஹாலைப் பார்வையிட வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் புள்ளி விவரங்களில் 15 வயதுக்குட்பட்ட சிறார்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. அவர்களையும் சேர்த்தால் பயணிகளின் எண்ணிக்கை 60 ஆயிரத்தைத் தாண்டும் என தொல்லியல் ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.
பயணிகளில் பெரும்பாலானோர் நீண்ட நேரம் தாஜ்மஹால் அமைந்திருக்கும் வளாகத்திலேயே இருப்பதால் கூட்ட நெரிசல் அதிகரிப்பதாகத் தெரிகிறது. அதைத் தவிர்த்து அனைத்து பயணிகளும் சிரமமின்றி தாஜ்மஹாலை கண்டுகளிக்கும் நோக்கில் இந்த நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருப்பதாக தொல்லியல் ஆய்வுத் துறை விளக்கமளித்துள்ளது.