ரூ.743 கோடி கடன் மோசடி: ஐடிபிஐ வங்கி அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு
ஐடிபிஐ வங்கியில் சந்தேகத்துக்குரிய வகையில் ரூ.743 கோடி கடன் வழங்கியதாக எழுந்த புகாரில் மூன்று வழக்குகளை சிபிஐ பதிவு செய்துள்ளது. இந்த விவகாரத்தில் தொடர்புடைய அந்த வங்கியின்
ஐடிபிஐ வங்கியில் சந்தேகத்துக்குரிய வகையில் ரூ.743 கோடி கடன் வழங்கியதாக எழுந்த புகாரில் மூன்று வழக்குகளை சிபிஐ பதிவு செய்துள்ளது. இந்த விவகாரத்தில் தொடர்புடைய அந்த வங்கியின் முன்னாள் அதிகாரிகள் மூவர் உள்பட 40-க்கும் மேற்பட்டோரின் பெயர்கள் முதல் தகவல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
அவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நீரவ் மோடி விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததைத் தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள பல்வேறு வங்கிகளின் கடன் மோசடிகள் ஒவ்வொன்றாக வெளிச்சத்துக்கு வரத் தொடங்கியுள்ளன.
அந்த வரிசையில் ஆந்திர மாநிலத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஐடிபிஐ வங்கியின் பலாங்கி கிளையில் கடந்த 2009-இல் இருந்து 2012 வரையிலான காலகட்டத்தில் வழங்கப்பட்ட மூன்று கடன்களில் மோசடி நடைபெற்றிருப்பது தெரியவந்துள்ளது. மொத்தமாக ரூ.743 கோடி வரையில் முறையான ஆவணங்கள் இன்றி அந்தக் கடன்கள் அளிக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
மீன்வளர்ப்பு மற்றும் விவசாயக் கடன் அட்டைத் திட்டத்தின் கீழ் அந்தத் தொகை குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் வழங்கப்பட்டிருக்கிறது. அதற்கு அடுத்த சில மாதங்களிலேயே அதை வாராக் கடனாக வங்கி அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரை விசாரித்த சிபிஐ அதிகாரிகள் இந்த நடவடிக்கை திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட மோசடி என்பதைக் கண்டறிந்தனர்.
இதையடுத்து ஐடிபிஐ வங்கியின் முன்னாள் அதிகாரிகள் தாமோதரன், ஆர்.கே.சாஹு, பட்டு ராமாராவ் ஆகிய மூவர் உள்பட 44 பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது.