222 தொகுதிகளுக்கான கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தல் மே 12-ஆம் தேதி (இன்று) நடைபெறுகிறது. 2 தொகுதிகளுக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மே 15-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.
இதையடுத்து அங்கு ஆளும் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டன. காங்கிரஸ் தலைவர் ராகுல், பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் அனல் பறக்கும் பிரசாரங்கள் நடைபெற்றன.
இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளர் சித்தராமையா இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார். இதில் அவர் போட்டியிடும் பதாமி தொகுதியில் அமைந்துள்ள குறிப்பிட்ட வாக்குச்சாவடிகள் வெறிச்சோடின.
பதாமி தொகுதியில் அமைந்துள்ள திப்பு நகரில் உள்ள 142, 143 மற்றும் 144 ஆகிய வாக்குச்சாவடிகள் காலை முதலே வெறிச்சோடின. மாநிலத்தின் பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் மக்கள் தொடர்ந்து வாக்களித்த நிலையில், இங்கு மட்டும் இதுபோன்ற நிலை ஏற்பட்டது.
இதுகுறித்து இப்பகுதி மக்கள் கூறுகையில், எங்கள் தொகுதியில் உள்ள வேலைவாய்ப்பின்மை காரணமாக இங்கு வசிக்கும் பெரும்பாலானவர்கள் வேலை தேடி வெளி இடங்களுக்கு குடிபெயர்ந்துவிட்டனர். எனவே இங்கு வாக்குப்பதிவு மிகவும் குறைவாகவே காணப்பட்டது என்று தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.