உ.பி. முதல்வருக்கு எதிரான மனு: உச்ச நீதிமன்றம் பரிசீலனை
உத்தரப் பிரதேச மாநிலம், கோரக்பூரில் நிகழ்ந்த கலவரம் தொடர்பான வழக்கில் முதல்வர் யோகி ஆதித்யநாத் மீது சட்ட நடவடிக்கை கோரும் மனுவை பரிசீலிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புக் கொண்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், கோரக்பூரில் நிகழ்ந்த கலவரம் தொடர்பான வழக்கில் முதல்வர் யோகி ஆதித்யநாத் மீது சட்ட நடவடிக்கை கோரும் மனுவை பரிசீலிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புக் கொண்டுள்ளது.
முன்னதாக, கோரக்பூரில் கடந்த 2007-ஆம் ஆண்டில் நிகழ்ந்த கலவரம் தொடர்பாக யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் காவல்துறையினர் சமர்ப்பித்த குற்றப் பத்திரிகையை உறுதி செய்து கீழ் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை, கடந்த 2017-இல் செஷன்ஸ் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. யோகி ஆதித்யநாத்திடம் விசாரணை நடத்த உரிய அனுமதி பெறப்படவில்லை என்ற அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதனை அலாகாபாத் உயர் நீதிமன்றமும் உறுதி செய்த நிலையில், ரஷீத் கான் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார். அதில், கோரக்பூர் கலவர வழக்கில் யோகி ஆதித்யநாத் மீது சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
இந்த மனுவை பரிசீலிக்க, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு திங்கள்கிழமை ஒப்புக்கொண்டது. மேலும், மனுவின் நகலை அனைத்து பிரதிவாதிகளுக்கும் அளிக்கவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.