பயங்கரவாதத்தை தூண்டும் விடியோ பார்த்தவரை பயங்கரவாதி என்று கூற முடியாது: கேரள உயர் நீதிமன்றம்
பயங்கரவாதத்தை தூண்டும் விடியோக்களை பார்ப்பதால் மட்டுமே ஒருவரை பயங்கரவாதி என்று கூறிவிட முடியாது என்று கேரள உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
பயங்கரவாதத்தை தூண்டும் விடியோக்களை பார்ப்பதால் மட்டுமே ஒருவரை பயங்கரவாதி என்று கூறிவிட முடியாது என்று கேரள உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
பயங்கரவாத குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட முகமது ரியாஸ் என்பவருக்கு தேசியப் புலனாய்வு அமைப்பின் நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்து விட்டது. அதையடுத்து, ஜாமீன் கேட்டு அவர் கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் அவர் கூறியிருந்ததாவது:
எனது முன்னாள் மனைவி கொடுத்த புகாரின் பேரில் தேசியப் புலனாய்வு அமைப்பினர் என்னைக் கைது செய்தனர். அவர், ஹிந்து மதத்தில் இருந்து இஸ்லாமுக்கு மாறியவர். எந்த பயங்கரவாத அமைப்புடனும் எனக்கு தொடர்பில்லை. எங்களுக்கு இடையே திருமண உறவில் விரிசல் ஏற்பட்ட காரணத்தினாலோ அல்லது யாரோ சிலரின் தூண்டுதலின் பேரிலோ எனக்கு எதிராக புகார் கொடுத்துள்ளார் என்று அவர் கூறியிருந்தார்.
இந்த மனு, நீதிபதிகள் ஏ.எம்.ஷபீக், பி.சோமராஜன் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்னிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அவர்கள் கூறியதாவது:
முகமது ரியாஸிடம் இருந்து 2 மடிக்கணினிகளை தேசியப் புலனாய்வு அமைப்பின் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். அந்த மடிக்கணினிகளில், சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மத போதகர் ஜாகீர் நாயக்கின் உரைகள் அடங்கிய விடியோக்கள், ஜிகாத் இயக்கம் தொடர்பான கட்டுரைகள், சிரியா போர் தொடர்பான விடியோக்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. ஒருவர் பயங்கரவாதத்தை தூண்டும் விடியோக்களைப் பார்ப்பதால் மட்டுமே அவரை பயங்கரவாதி என்று கூறிவிட முடியாது. அவர் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டதை உறுதிப்படுத்துவதற்கான ஆதாரங்கள் வேண்டும் என்று நீதிபதிகள் கூறினர். அதைத் தொடர்ந்து அவருக்கு நீதிபதிகள் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர்.