கோலாலம்பூர்: மலேசியாவில் வரும் ஜூன் மாதம் முதல் தேதியில் இருந்து ஜிஎஸ்டி வரி நீக்கப்படுகிறது என்றும் , அதற்குப் பதிலாக எஸ்எஸ்டி வரிவிதிப்பு முறை அமலாக உள்ளது என்றும் அந்நாட்டு நிதித்துறை அறிவித்துள்ளது.
மலேசியாவின் முன்னாள் பிரதமரான நஜீப் ரஜாக்கால் கடந்த 2015-ஆம் ஆண்டு ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறை அமலாக்கப்பட்டது. சமீபத்தில் நடந்த பொதுத்தேர்தலில் நஜீப் ரஜாக் தோல்வியடைந்தார். எதிர்கட்சித் தலைவரான 92 வயது மகாதீர் முகம்மது ஆட்சிக்கு வந்தார்.
இந்நிலையில் மலேசியாவில் வரும் ஜூன் மாதம் முதல் தேதியில் இருந்து ஜிஎஸ்டி வரி நீக்கப்படுகிறது என்றும் , அதற்குப் பதிலாக எஸ்எஸ்டி வரிவிதிப்பு முறை அமலாக உள்ளது என்றும் அந்நாட்டு நிதித்துறை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அந்நாட்டு நிதித்துறை வியாழனன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
அதிகரித்து வரும் வருவாய் இழப்பை ஈடு செய்வதற்காக வரும் ஜூன் 1-ஆம் தேதி முதல் நடைமுறையில் உள்ள ஜிஎஸ்டி வரி விதிப்பானது 0% ஆக குறைக்கப்படும். இதனை ஈடு செய்யும் நடவடிக்கைகளில் திட்டமிட்ட வகையில் வருவாய் ஈட்டுதல் மற்றும் செலவு குறைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அதன் ஒரு பகுதியாக, எஸ்எஸ்டி எனப்படும் விற்பனை மற்றும் சேவை வரி விதிப்பு முறை மறு அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் எப்பொழுது முதல் எஸ்எஸ்டி வரிவிதிப்பு முறை அமலாக உள்ளது என்பதுபற்றி எதுவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.