பெங்களூரு: நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க உள்ள நிலையில் கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ ஒருவருடன் பாஜகவின் ஜனார்தன் ரெட்டி பேரம் பேசும் பரபரப்பு ஆடியோ வெளியாகியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் பாஜகவை ஆட்சியமைக்க அழைப்பு விடுத்த ஆளுநரின் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கர்நாடக சட்டப்பேரவையில் நாளையே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டுள்ளது.
ஒரு வார கால அவகாசம் கேட்ட எடியூரப்பா தரப்பின் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம், கர்நாடக சட்டப்பேரவையில் நாளை மாலை 4 மணிக்கு வாக்கெடுப்பு நடத்தவும், ரகசிய வாக்கெடுப்பு நடத்தக் கூடாது என்றும், வெளிப்படையாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. சட்டப்பேரவையில் எம்எல்ஏக்கள் கைகளை உயர்த்தி வாக்கெடுப்பு நடத்தும் வகையில் நடத்த உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
அதேசமயம் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களிடம் கர்நாடக மாநில பாரதிய ஜனதா தலைவர்கள் பேசியதற்கு ஆதாரம் உள்ளது: என்று கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் சித்தராமையா செய்தியாளர்களிடம் வெள்ளியன்று மாலை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ ஒருவருடன் பாஜகவின் ஜனார்தன் ரெட்டி பேரம் பேசும் பரபரப்பு ஆடியோ வெளியாகியுள்ளது.
காங்கிரஸ் கட்சி சார்பில் வெளியாகியுள்ள இந்த ஆடியோவில், கர்நாடகாவின் ராய்ச்சூர் மாவட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏவுடன் பாஜகவைச்ச சேர்ந்தவரும் பெரும் பணக்கராரருமான ஜனார்தன் ரெட்டி தொடர்பு கொண்டு பேசுகிறார்.
அவர் தனது பேச்சில் பாஜகவுக்கு ஆதரவாக நடந்து கொண்டால் அமைச்சரவையில் இடம் அளிப்பதாகவும், பாஜகவின் முக்கிய தலைவர்களை நேரில் சந்திக்க ஏற்பாடு செய்வதாகவும் கூறுகிறார்.
நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க உள்ள நிலையில் இந்த ஆடியோ பெரும் பரபரப்பினைக் கிளப்பியுள்ளது.