அஸ்ஸாமில் பயங்கரவாதத் தாக்குதலுக்கு 5 பேர் பலி: ராஜ்நாத் சிங் கண்டனம்
அஸ்ஸாமில் அப்பாவி பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார்.
லக்னௌ: அஸ்ஸாமில் அப்பாவி பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற கோழைத்தனமான தாக்குதலை ஒருநாளும் சகித்துக் கொள்ள முடியாது என்று ராஜ்நாத் கூறியுள்ளார்.
லக்னௌவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த ராஜ்நாத் சிங், இன்று காலை அஸ்ஸாம் முதல்வர் சர்வானந்த சோனோவாலிடம் பேசியதாகவும், தகுந்த நடவடிக்கை எடுக்க மத்திய அரசு உறுதுணை புரியும் என்று அவரிடம் கூறியதாகவும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
Advertisement
அஸ்ஸாம் மாநிலம், தின்சுகியா மாவட்டத்தில் உல்ஃபா (ஐ) பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். 2 பேர் காயமடைந்தனர். உயிரிழந்த 5 பேரும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள்.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: கெரோனி என்ற கிராமத்தில் சில வீடுகளில் இருந்தவர்கள் வெளியே அழைத்து அவர்கள் மீது உல்ஃபா பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், 5 பேர் உயிரிழந்தனர். 2 பேர் காயமடைந்தனர் என்று போலீஸார் தெரிவித்தனர்.
இந்தத் தாக்குதலுக்கு அஸ்ஸாம் முதல்வர் சர்வானந்த சோனோவால் கண்டனம் தெரிவித்திருந்தார்.