ரஃபேல் ஒப்பந்தம்: உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது மத்திய அரசு
ரஃபேல் போர் விமானம் வாங்கிய ஒப்பந்தம் தொடர்பான அறிக்கையை மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்தது.
புது தில்லி: ரஃபேல் போர் விமானம் வாங்கிய ஒப்பந்தம் தொடர்பான அறிக்கையை மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்தது.
ரஃபேல் போர் விமானம் வாங்கியதில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஒப்பந்தம் தொடர்பான அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
இந்த நிலையில், ஒப்பந்தம் தொடர்பான அறிக்கையை மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்தது. 36 ரஃபேல் போர் விமானங்கள் வாங்கியது தொடர்பான ஒப்பந்த விவரங்கள் என்று தலைப்பிட்டு அளிக்கப்பட்டிருக்கும் அறிக்கையில், பாதுகாப்புத் தளவாடங்கள் வாங்குவதற்கான விதிமுறைகள் - 2013 அனைத்தும் முறையாக பின்பற்றப்பட்டே ரஃபேல் போர் விமானங்கள் வாங்கப்பட்டுள்ளன.
பிரான்ஸ் நாட்டிடம் இருந்து ரஃபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கான பரிந்துரைக்கு பாதுகாப்புத் துறைக்கான தளவாடங்கள் வாங்குவதற்கான ஆணையமும் ஒப்புதல் அளித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ரஃபேல் விமானத்தின் விலை உள்ளிட்ட முக்கிய விவரங்கள் எதுவும் அறிக்கையில் இடம்பெறவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.