சிவசேனை கட்சியின் நிறுவனர் பால் தாக்கரேவின் நினைவிடம் அமைப்பதற்கான நிலத்தை, அப்பணியை மேற்கொள்ளும் அறக்கட்டளையிடம் பிருஹன் மும்பை மாநகராட்சி நிர்வாகம் (பிஎம்சி) ஒப்படைத்துள்ளது.
மத்திய மும்பையின் தாதர் பகுதியில் சிவாஜி பூங்கா அருகேயுள்ள அந்த நிலத்தில்தான், மும்பை மேயரின் அதிகாரப்பூர்வ இல்லம் உள்ளது. தற்போது அந்த நிலத்துக்கான பயன்பாட்டு உரிமை, பாலாசாகேப் தாக்கரே நினைவு பொது அறக்கட்டளைக்கு மாற்றப்பட்டுள்ளது.
இதனால், மேயர் விஸ்வநாத் மாதேஸ்வர், பைகுல்லா பகுதியில் கட்டப்பட்ட வேறு இல்லத்துக்கு மாறவிருக்கிறார். அதற்கான நிர்வாகரீதியிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பிஎம்சி உதவி ஆணையர் (அரசு இல்லங்கள் பராமரிப்புத் துறை) பராக் மசூர்கர் கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், "சுமார் 11,500 சதுரமீட்டர் அளவுள்ள அந்த நிலம், கடந்த 1928-இல் கட்டப்பட்ட பங்களாவுடன் கூடியதாகும். அந்த நிலத்தை கடந்த 1962-இல் வாங்கிய மும்பை மாநகராட்சி, அங்குள்ள பங்களாவை மும்பை மேயரின் அதிகாரப்பூர்வ இல்லமாக மாற்றியது. தற்போது மாதத்துக்கு ரூ.1 என்ற பெயரளவிலான குத்தகையின் அடிப்படையில், பாலாசாகேப் தாக்கரே அறக்கட்டளையிடம் நிலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது' என்றார்.
மறைந்த சிவசேனை நிறுவனர் பால் தாக்கரேவுக்கு, சிவாஜி பூங்கா அருகே நினைவிடம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு கடந்த 2016-இல் வெளியிடப்பட்டது.
சிவாஜி பூங்கா மைதானத்தில்தான் தனது கட்சியின் முதல்கூட்டத்தை பால் தாக்கரே நடத்தினார். மேலும், ஆண்டுதோறும் தசரா பண்டிகையையொட்டி இந்த மைதானத்தில் நடைபெறும் பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் அவர் உரையாற்றுவது வழக்கமாகும்.