புது தில்லி: இந்தியக் கடற்படைக்கு போர்க்கப்பல்கள் தயாரிக்க இந்தியா - ரஷ்யா இடையே ரூ.3570 கோடி மதிப்பில் ஒப்பந்தம் செவ்வாயன்று கையெழுத்தாகியுள்ளது.
இந்தியக் கடற்படைக்காக இந்தியாவின் கோவாவிலேயே போர்க்கப்பல்கள் தயாரிக்க இந்தியா - ரஷ்யா இடையே செவ்வாயன்று ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இந்த ஒப்பந்தமானது பாதுகாப்புத் தளவாடங்கள் தயாரிக்கும் இந்திய பொதுத்துறை நிறுவனமான கோவா ஷிப்யார்ட் லிமிட்டட் (ஜி.எஸ்.எல்) மற்றும் ரஷ்ய அரசின் பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்படும் ரோசோபோரோன் நிறுவனத்திற்கும் இடையே கையெழுத்தாகியுள்ளது.இந்த ஒப்பந்தமானது இரு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பு அடிப்படையின் கீழ் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ் போர்க்கப்பல்கள் தயாரிக்கத் தேவையான வடிவமைப்பு, தொழில்நுட்பம் மற்றும் ஒரு சில முக்கியமான பாகங்களை, ஜி.எஸ்.எல்லுக்கு ரஷ்ய நிறுவனம் வழங்கும்.
இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றிடம் பேசிய ஜி.எஸ்.எல் நிறுவன தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநரான சேகர் மிட்டல் கூறியதாவது:
கோவாவில் இரு போர்க்கப்பல்கள் தயாரிப்பதற்கான ரூ.3570 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை ரஷ்யாவுடன் இன்று இறுதி செய்துள்ளோம்.
அதன்படி இரு போர்கப்பல்கள் தயாரிப்பதற்கான கட்டுமானப் பணிகள் 2020-ஆண்டு துவங்கும். முதல் கப்பலானது 2026-ஆம் ஆண்டிலும், இரண்டாம் கப்பலானது 2027-ஆம் ஆண்டிலும் கப்பல் படையில் சேர்க்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.