முகப்பு
இந்தியா

முசாஃபர்பூர் சிறுமிகள் காப்பக வழக்கு: 6 மாதம் தலைமறைவாக இருந்த பெண் குற்றவாளி நீதிமன்றத்தில் சரண் 

முசாஃபர்பூர் சிறுமிகள் காப்பக வழக்கில், 6 மாதங்கள்  தலைமறைவாக  இருந்த முக்கிய பெண் குற்றவாளி செவ்வாயன்று நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். 

Updated On : 30 ஜனவரி, 2024 at 5:40 PM
பகிர்:

முசாஃபர்பூர்: முசாஃபர்பூர் சிறுமிகள் காப்பக வழக்கில், 6 மாதங்கள் தலைமறைவாக  இருந்த முக்கிய பெண் குற்றவாளி செவ்வாயன்று நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். 

பிகார் மாநிலம் முசாஃபர்பூர் பகுதியில் அரசு நிதியுதவியுடன் செயல்பட்டு வந்த காப்பகம் ஒன்றில் தங்கியிருந்த 30-க்கும் மேற்பட்ட சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக மும்பையைச் சேர்ந்த டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோசியல் சயின்ஸ் என்ற நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின் மூலமாக தெரிய வந்தது. அதையடுத்து அங்கிருந்த 42 சிறுமிகளும் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டனர். அதில் 34 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. 

இந்த விவகாரத்தில் அந்த காப்பகத்தின் உரிமையாளர் பிரஜேஷ் தாக்குர் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் பிரஜேஷ் தாக்குருக்கும், அந்த மாநில சமூக நலத் துறை அமைச்சர் மஞ்சு வர்மாவின் கணவர் சந்திரசேகர் வர்மாவுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது தெரியவந்தது. அதையடுத்து மஞ்சு வர்மா பதவி விலகினார். 

Advertisement

பின்னர் இவ்வழக்கில் தற்போதைய சிபிஐ குழு நடத்தி வரும் விசாரணையை நிறுத்துமாறும் புதிய சிபிஐ குழுவை நியமிக்குமாறும் பாட்னா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ மேல் முறையீடு செய்தது. 

அதை விசாரித்த உச்ச நீதிமன்றம் தற்போதைய சிபிஐ விசாரணை முறையாக நடைபெறுவதாகவும் அதை நிறுத்திவிட்டு புதிய குழு அமைக்க தேவையில்லை என்றும் கூறி உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் வழக்கில், 6 மாதங்கள்  தலைமறைவாக இருந்த முக்கிய பெண் குற்றவாளியான மது குமாரி, செவ்வாயன்று நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.  

இந்த வழக்கில் மே 31 - ஆம் தேதியன்று பிரஜேஷ் தாக்குர், மது குமாரி உள்பட 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்பட்டவுடன், மது குமாரி, உடனடியாக தலைமறைவானார். ஆறு மாத தலைமறைவு வாழ்கைக்குப் பிறகு, செவ்வாயன்று அவர் முசாஃபர்பூ சிபிஐ அலுவலகத்தில் செவ்வாயன்று நேரில் ஆஜரானார் 

சிபிஐ நினைப்பது போல தனக்கு பிரஜேஷ் தாக்குருடன் நெருக்கமான தொடர்பு இல்லை என்று மறுத்த அவர், தான் அந்த தொண்டு நிறுவனத்தில் வெறும் ஊழியர் மட்டுமே என்றும், தனக்கும் அந்த சம்பவங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் தெரிவித்தார்.   பின்னர் அவர் உள்ளூர் நீதிமன்றம் ஒன்றில் சரணடைந்தார்.    

பிரஜேஷ் தாக்குரின் தொண்டு நிறுவனத்தில், 2001-ஆம் ஆண்டு முதல் சமூக ஊழியராக மது குமாரி பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments