போலீஸ் வாகனத்தில் முதல்வர் சந்திரசேகர ராவின் டிஆர்எஸ் கட்சிக் கொடி பறந்த விவகாரம் தெலங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத்தில் உள்ள உப்பல் பிரதான சாலையில் நின்றுகொண்டிருந்த போலீஸ் வாகனத்தில் சில அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அங்கு ஆளும் கட்சியாக உள்ள தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதியின் கட்சிக் கொடியை கட்டி பறக்க விட்டனர். மேலும் அதனை தங்கள் செல்ஃபோனில் படம்படித்தனர். இச்சம்பவம் தொடர்பான விடியோவும் சற்று நேரத்தில் வைரலாகி அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பின்னர் இதுகுறித்து உயரதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்டமாக தனது வாகனத்தை சரியாகக் கண்காணிக்காமல் அக்கறையின்றி பணி செய்ததாகக் கூறி அப்போலீஸ் வாகனத்தின் ஓட்டுநர் பணியிடை மாற்றம் செய்யப்பட்டார். மேலும் அந்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இருப்பினும், சில பழைய தொகுப்புகளை ஒன்றிணைத்து மார்ஃபிங் செய்து இதுபோன்று போலீஸ் மீது அவதூறு பரப்பும் விதமாக சில விஷமிகள் செயல்படுவதாக தெலங்கானா போலீஸ் கமிஷனர் மகேஷ் எம்.பகவத் தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல் தெலங்கானா போலீஸ் நாட்டில் முதலிடத்தில் இருப்பதாகவும், மக்கள் நலனில் கவனம் செலுத்தி வருவதாகவும் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.