தெலங்கானா அரசு ரூ.2 லட்சம் கோடி கடனில் உள்ளபோதிலும் அம்மாநில முதல்வர் மகனின் வருவாய் 400 சதவீதம் உயர்ந்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் குற்றம்சாட்டினார்.
கோடங்கல் தொகுதியின் கொஸ்கி பகுதியில் காாங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட அக்கட்சித் தலைவர் ராகுல், பேசியதாவது:
சிறந்த பொருளாதாரத்துடன் ரூ.17 ஆயிரம் கோடி கூடுதல் நிதி கொண்டிருந்த தெலங்கானா அரசு தற்போது ரூ.2 லட்சம் கோடி கடனில் உள்ளது. ஆனால் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மகன் கேடிஆரின் வருவாய் மதிப்பு மட்டும் 400 சதவீதம் உயர்ந்துள்ளது. டிஆர்எஸ் என்பது தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கிடையாது ஆனால் இது தெலங்கானா ராஷ்ட்ரிய சங்பரிவார் ஆகும்.
ஆட்சிக்கு வந்தால் 4 கோடி மக்களின் வாழ்வாதாரமும் உயர்த்தப்படும் என உறுதியளித்த சந்திரசேகர ராவ், தற்போது அனைவரையும் கைவிட்டுவிட்டார். தெலங்கானாவில் உள்ள ஒவ்வொரு மக்களின் மீதும் 60 ஆயிரம் ரூபாய் கடன் உள்ளது. பிரானஹித செவெலா திட்டத்தின் மறுதிட்டத்தின் மூலம் சந்திரசேகர ராவ் ரூ.40 ஆயிரம் கோடி பலனடைந்துள்ளார்.
மாநிலத்தில் உள்ள 1 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்துவதாக உறுதியளித்த சந்திரசேகர ராவ், அவரது குடும்பத்தின் 4 பேருக்கு மட்டும் வருவாய் பெறும் நிலையை ஏற்படுத்திக்கொண்டார். பிரதமர் மோடியை ஆதரிப்பதுதான் சந்திரசேகர ராவ் மற்றும் ஓவைஸியின் முக்கிய நோக்கம்.
எனவே வருகிற பேரவைத் தேர்தலில் தெலங்கானாவில் டிஆர்எஸ் கட்சியை வீழ்த்துவதும், பின்னர் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக-வை வீழ்த்துவதும் தான் காங்கிரஸ் கட்சியின் முக்கிய குறிக்கோள் என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.